மறக்க முடியாத மனிதர் மார்க் ஆண்டனி ரகுவரன்!

ரகுவரன். இந்தப் பெயர் எங்கு கேட்டாலும் நினைவுக்கு சட்டென்று ஒருவரது முகம் வந்து போகும். 80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிபோட்ட நம் மார்க் ஆண்டனி நடிகர் ரகுவரன் அவர்கள்.

இன்றைய தலைமுறை வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி நூலகம் திரு.ரகுவரன். தனகென்று ஒரு ஸ்டைலை உருவாக்கி, அதில் வெற்றி பெற்றவர்களில் இவருக்கு தனி இடமுண்டு.

இளங்கலை பட்டதாரியான இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தது. சிறுவயதிலேயே இவரது குடும்பம் கோயம்புத்தூர்க்கு குடிபெயர்ந்தது.

முதலில் நாடகத்தில் நடித்து வந்த இவர், 1982-ல் ‘காக்கா’ என்ற மலையாள சினிமாவில் எதிர்மறை நாயகனாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் வெளிவந்தது ஏழாவது மனிதன். முதன் முறையாக ரகுவரன் கதாநாயகனாக நடித்தது அந்த படம் தான்.

முதலில் நாடகமாக வந்த ஏழாவது மனிதன் பின்பு திரைப்படமாக எடுக்க பட்டது. மாறுபட்ட விமர்சனங்கள் வந்தன. ஆனால் அதிக விருதுகளை வாங்கி குவித்தது அந்த படம்.

மீண்டும் அதே ஆண்டு ‘மருமகளே வாழ்க’ என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

‘சில்க் சில்க் சில்க்’ என்ற திரைப்படம் அவருக்கு பல சினிமா வாய்ப்பை தேடி தந்தது. தொடர்ந்து சில படங்களில் அவர் நடித்தாலும். எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வெற்றி தரவில்லை.

இவர் நடித்த ‘தியாகு’ படம் வெளியாக பல சிக்கல்கள் எழுந்தன. யாரும் படத்தை வெளியிட முன்வரவில்லை. அந்நேரம் அரசாங்கமே அந்தப் படத்தை வாங்கி வெளியிட்டது.

சிறிது காலத்திற்கு பின் 1986-ல் வெளிவந்தது விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’. சிறந்த குணசித்திர நடிகர் அந்தஸ்தை அந்த படம் அவருக்கு வழங்கியது. (இருப்பினும் விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை)

அதன்பிறகு தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பெறத் தயாரானார். அதே வருடம் வந்த ‘மீண்டும் பல்லவி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

அதற்குப் பின் மீண்டும் வில்லனாக களம் இறங்கிய நேரத்தில் வெளிவந்தது ‘மந்திரப் புன்னகை’. (இந்த படத்திலிருந்துதான் ரகுவரனுகென்று தனி ரசிகர்கள் உருவானார்கள்)

சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவர் வில்லன் மற்றும் குணசித்திர வேடத்தில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்பினர்.

மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, போன்ற படங்கள் இவரின் சினிமா வாழ்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து பாராட்டுக்களை குவித்தார். ரஜினியின் வில்லன் என்றே இவருக்கு அடைமொழி வைக்கப்பட்டது.

90-களின் ஆரம்பத்தில் தனக்கான தனி ஸ்டைல்லை ‘புரியாத புதிர்’ திரைப்படம் மூலம் கொண்டு வந்தார். அதில் பேசும் ‘ஐ நோ’ வசனம் இன்றும் மிமிக்ரி பிரியர்களுக்கு வரமாக உள்ளது.

மூடுபனிக்கு பிறகு ஒரு சைகோவை கண்முன் நிறுத்தி அதை ரசிக்கவும் வைத்தார்.

அதற்கு பின் குணசித்திர மற்றும் எதிர்மறை நாயகன் வேடத்தையே ஏற்று நடித்தார். இடையில் தூள் பறக்குது, கொஞ்சும் கிளி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு வெளிவந்து வெற்றி பெற்றது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த காதலன்.

இன்று வரை பிரபலமாக இருக்கும் அவருக்கான தனி இசை அமைக்கபட்டது அந்த படத்தில்தான். அதே ஆண்டில் அடுத்து அவர் வாழ்வில் தனி மாற்றத்தை கொடுத்த ஒரு படம் வெளிவந்தது. அதுதான் பாட்ஷா.

தன் முந்தைய படங்களின் ரெக்கார்ட்டையை இந்தப் படம் முறியடித்தது. ரஜினிகாந்துக்கு சமமான வில்லன் வேடம். மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு தனி தீனி போட்டது எனலாம்.

தொடர்ந்து வந்த முத்து படத்தில் தனி கதாபாத்திரமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து, கோலங்கள், செல்வா, தொட்டா சிணுங்கி போன்ற படங்கள் இவரது நடிப்புக்கு விருந்தாக அமைந்தன.

மீண்டும் 1996-ல் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘அருணாசலம்’ திரைப்படம் வெளிவருகிறது. தன் பாணியை வேறுகோணத்தில் வெளிபடுத்துகிறார். ரஜினிக்கு இணையான கைதட்டல் அவருக்குக் கிடைகின்றது.

பின் விஜயுடன் லவ் டுடே, நிலவே வா, நேருக்கு நேர், என்றென்றும் காதல் போன்ற படங்கள் வெளிவந்தன. சிறந்த குணசித்திர கதாபாத்திரத்தில் தன்னை நிருபித்த வருடங்கள் அவை.

1999-ல் அவரது அடுத்த வெற்றிக்கான படம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கத்தில் முதல்வன். அதுவரை இல்லாத ஒரு வில்லன் வேடம். முதல்வராக கோபம் காட்டும் விதமாகட்டும், இறுதியில் தட் வாஸ் குட் இன்டர்வியூ என்று சொல்லும் விதமாகட்டும், இவருக்கு நிகர் இவர் மட்டுமே.

இந்தத் திரைப்படத்திர்காக தேசிய விருது பெற்றார் (சிறந்த வில்லன்).

அமர்க்களம், இரணியன், கண்ணுக்குள் நிலவு, முகவரி, குட் லக், வல்லரசு போன்ற படங்களில் இமாலய வெற்றியை தக்க வைத்தார். பின் தனது குணச்சித்திர பாத்திரங்களையே ஏற்று நடிக்க தயாரானார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஸ்டார், பார்த்தேன் ரசித்தேன், உயிரிலே கலந்தது, தோஸ்த், மஜ்னு, நரசிம்ஹா, ரோஜாக் கூட்டம், திருமலை, ரன், பாலா, மாஸ் (தெலுங்கு) போன்ற படங்கள் இவரின் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியது.

சச்சின், தீபாவளி, சிவாஜி போன்ற படத்தில் ஒன்று இரண்டு காட்சிக்கே இவர் வந்தாலும் ரசிகர்கள் அவரை ஏற்றுகொண்டனர். மருதமலை, பீமா, அசோகா, யாரடி நீ மோகினி போன்ற அவரது இறுதிகட்ட திரைப்படங்கள் அவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது.

யாரடி நீ மோகினி அவர் நடித்த கடைசி படம்.

கந்தசாமி திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்த வேடத்தில் முதலில் இவர்தான் நடித்தார். பாதியிலையே இவர் இறந்து விட்டதால் அந்த வாய்ப்பு ஆஷிஷ் வித்யார்த்திக்கு போனது.

மதுப் பழக்கம் அதிகம் இருந்ததால் அவரின் மனைவி நடிகை ரோகிணி அவரை விட்டு ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றுவிட்டார்.

இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகன் உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2008, மார்ச் 19-ல் உயிரிழந்தார் ரகுவரன். அவர் பாடிய 6 பாடல் கொண்ட இசை ஆல்பத்தை 2018-ல் ரஜினிகாந்த் வெளியிட அதை ரோகிணியும் அவர்களது மகனும் பெற்று கொண்டனர்.

தனக்கான ஒரு தனி இடத்தையும், தனி ஸ்டைல்ளையும், வசன உச்சரிப்பையும் அமைத்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா மொழி படங்களில் வலம் வந்தவர்.

ரகுவரன் இல்லாமல் பாட்ஷா படத்தையோ, முதல்வன் படத்தையோ, புரியாத புதிர் படத்தையோ நினைத்து பாருங்கள்.

எதுவாயினும் இன்று அவர் இருந்திருந்தால் குணசித்திர வேடத்தில் பல எண்ணற்ற படங்களைத் தந்திருப்பார். மறக்க முடியாத ஒரு கலைஞன் மார்க் ஆண்டனி ரகுவரன் அவர்கள்.

You might also like