சென்னையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா!

இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழக ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி முதல் முறையாக மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நாட்டுப்பண் இசைக்க தேசிய கொடியை ஏற்றினார்.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்துச் சென்றன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை ஆளுநர், முதல்வர் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது.

இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றது.

இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெறுகிறது.

அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீர தீர செயல்களைப் புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குடியரசு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

You might also like