ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை: தமிழகம் வந்தது மத்தியக் குழு!

– ஐந்து நாட்கள் கண்காணிக்க முடிவு

தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரசின் பரவும் தன்மை அதிவேகமாக இருப்பதால் பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. ஒமிக்ரான் வைரஸ் மற்றும் அதன் பாதிப்பு குறித்து பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரையில் 415-க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, அரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், சண்டிகர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 42 பேரின் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசின் வைராலஜி துறையில் இருந்து வரவேண்டியுள்ளது.

இந்தநிலையில், ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஒமிக்ரான் பாதிப்பு காணப்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன்படி, தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் மத்திய அரசின் குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழு ஒமிக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.

அதன்படி, தமிழகத்திற்கான குழுவில் மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் டாக்டர் புர்பசா, டாக்டர் வினிதா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. இந்தக் குழு 5 நாட்கள் தங்கியிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஒமிக்ரான் பாதித்தோர் சிகிச்சை பெற சிறப்பு வார்டு, மருத்துவ வசதி, ஆக்சிஜன் வசதிகள், ஆய்வக வசதிகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது.

அதன்பிறகு, மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்றாற்போல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

27.12.2021 1 : 30 P.M

You might also like