நோய்த் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவும்!

– முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரசாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 34 பேர் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்தும், ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகை காலங்களில், கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும்,

தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினைக் குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

* பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

* பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

* அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

* கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You might also like