ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்லம் டாக் மில்லியனியர்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதையும் வென்றார்.

இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் ‘பத்ம பூஷண்’ விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் ‘மொசார்ட்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

அறிமுக இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய ஜென்டில் மேன், கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இன்றளவும் மனதில் நிற்பவையாக இருக்கின்றன.

தென் இந்திய மொழிகளில் கலக்கி வந்த ஏ.ஆர்.ரகுமானின் புகழ் உலகளவில் பிரபலம். ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பயணத்தில் மேலுமொரு மணிமகுடமாக ’43rd Cairo International Film Festival’ -ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 வரை எகிப்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில் இசைச் சார்ந்த மேதைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது வென்ற இசைப் புயலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

You might also like