விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!

அமலாக்கத்துறை விசாரணை!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அதில், “விஜயபாஸ்கரிடம் தொழில்ரீதியாக தொடர்பு இருந்து வந்தது. அவர் என்னிடம் வாங்கிய ரூ.14 கோடி பணத்தில் ரூ.3 கோடியை மட்டும் திருப்பி தந்தார். மீதி பணத்தைத் திருப்பி தரவில்லை. அதனைக் கேட்டால் அவர் மிரட்டுகிறார். எனவே எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதுதொடர்பாக ஷர்மிளாவிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்கத்தை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் கொடுத்ததாகவும், அவர்தான் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் கையாளப்பட்டிருப்பதாக கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறைக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி நேற்று காலை 10.30 மணியளவில் விஜயபாஸ்கர் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

நெல்லையில் என் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான புகார் அளித்துள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல குற்றப் பின்னணி கொண்ட ஷர்மிளா தொடர்பாக அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை வந்தது. அழைப்பாணை வந்ததின் பேரில் சாட்சியாக நேரில் ஆஜராகி உரிய விவரம் அளித்துள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு எதிராக ஊழல் புகார்கள் எழுந்தன. இதனால் சமீபத்தில் அவருடைய வீடு, அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

இந்தச் சூழலில் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராகியது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like