கொதிக்க வைத்த தண்ணீரைக் குடியுங்கள்!

– பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்

தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின், வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துதல் நல்லது.

தொற்று நோய் வராமல் தடுக்க, சோப்புப் போட்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வெள்ள நீரில் நனைந்த உணவு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் அருந்துதல் நலம்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

குளங்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் இருந்து, தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்க நேர்ந்தால், உடனடியாக 104-ல், பொது சுகாதார கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப்பானது அல்ல. வெள்ள பாதிப்புப் பகுதிகளுக்கு தேவையின்றி போகக்கூடாது. தேங்கிய மழை நீர் மற்றும் குப்பையை, உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு உரிய முக கவசம், கை மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும். சரியான அளவில் குளோரின் கலந்த குடிநீரை குடிக்க பயன்படுத்துவதை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்கள், முகாமில் தரப்படும் குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும். தற்காலிக முகாம்களில், கொரோனா தடுப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குப்பை மற்றும் அழுகிய பொருட்களில் ஈக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு வைத்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுடன், பொது சுகாதாரத்துறை இணைந்து, மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களை உருவாக்கும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like