குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!

சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறைத் திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள் அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம்.

தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில், சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் தற்போது அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி தானே என்று எண்ணிவிடக்கூடாது. அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதல்வர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது.

‘இல்லம் தேடிக் கல்வி‘ திட்டத்துக்கு, இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்ய முன்வர வேண்டும்.

‘அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்‘ என்று மாற்றிக்காட்ட கடுமையாக உழைத்து வருகிறோம்” எனக் கூறினார்.

You might also like