உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி – ஒரு சோற்றுப் பதம்.

அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற சொல் பலப்பல பாடல்களிலும், பெயர்களிலும் புழங்கியிருக்கிறது.

மதுரையில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெருவில் முதன் முதலாகத் துவக்கப்பட்ட நாடக நடிகர் சங்கத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்ட பெயர் ‘தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்’.

ஐம்பதுகளில் உருவான காங்கிரஸ் கமிட்டியின் பெயர் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’.
தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதற்காக சட்டமன்றத்தில் பெரும் விவாதங்களே நடந்தேறியிருக்கின்றன.

1956 மார்ச் 2 ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம் பேசும் போது, இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“சென்னை ராஜ்யம் என்கிற பெயருக்குப் பதில், ‘தமிழ் ராஜ்யம்’ என்று பெயர் வைப்பதில், பல சிக்கல்கள், கஷ்டங்கள் உண்டு என்பதை மறுக்க வேண்டியதில்லை.

இருந்தாலும், நம்முடைய நாட்டுக்குத் தனியாக, ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் தான் பொருந்தும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இது ஒரு நாளும் இந்திய ஒற்றுமைக்கு விரோதம் அல்ல. ‘தமிழ்நாடு’ என்று பெயரிடுவது தான் முறை.”

இது மட்டுமல்ல, ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு 1956 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் மாதம் உயிரிழந்த சங்கரலிங்கத்தைப் பற்றி இளம் வாசகர்கள் தெரிந்து கொள்ள அவரைப் பற்றிய பதிவை மீண்டும் வெளியிடுகிறோம்.

‘மணா’வின் ‘தமிழகத் தடங்கள்’ என்ற நூலில் இருந்து ஒரு பகுதி:
*
ஆந்திரா தனி மாநிலமாக உருவாவதற்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பொட்டி ஸ்ரீராமுலு நினைவாக ஒரு நினைவகம் ஆந்திர அரசால் பராமரிக்கப்படுகிறது.
அதேமாதிாி ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரை நம் நினைவுகளில் நிறுத்தியிருக்கிறோமா?

விருதுநகரில் ஊருக்கு நடுவே இருக்கிற தேசபந்து மைதானம் பலருக்கும் பரிச்சயமானது. தியாகிகளின் நினைவாக ஸ்தூபி மண்ணிலிருந்து எழுந்த சுட்டுவிரல் மாதிரி நிற்கிறது.

சந்தடி மிகுந்த அந்த தேசபந்து மைதானத்தில்தான் இந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அமைதியான உண்ணாவிரதப் போராட்டம் நடந்திருக்கிறது என்பது அங்குள்ள பலருக்கும் தெரியுமா?

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்ததை அடுத்து உருவான எழுச்சியில் ஆந்திர மாநிலம் உருவெடுத்தது.
விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கத்திற்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது.

காமராஜர் படித்த அதே பள்ளியில் படித்த இவர், வணிகத்தில் புகுந்து காங்கிரஸில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார்.

நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தைத் துவக்கிய இவருக்கு ராஜாஜி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார்.

பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார்.

பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும்.

அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்.

தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று 12 கோரிக்கைகளுடன் ஜூலை 27-ஆம் தேதி அன்று சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.

ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.

நாளாக நாளாக சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா.

“பொது ஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத்திறன் இருந்தால் திருத்திக் கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார் அண்ணா.

76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இது குறித்து செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

அக்டோபர் 10 ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.

அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

மதுரை எா்ஸ்கின் மருத்துவமனையில் இருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவரை அடக்கம் செய்வதில் துணைநின்றவர்கள் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள். சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்து கோரிக்கை, அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்த கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவைக் கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து 1964 ஜனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

1967-ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது.

1968 ஜூலை 18-ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

23.11.1968-ல் ‘தமிழ்நாடு’ பெயா் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து 01.12.1968 தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப் பட்டபோது, சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டது.

You might also like