ஜூனில் பொதுத்தேர்வு நடத்த முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த பத்து மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுத்தேர்வை முன்னிட்டு புதிய கல்வி ஆண்டில் சில மாதங்களாவது பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெற்றோர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன்பின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூன் மாதத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், மே கடைசி வாரத்தில் துவங்கி ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டு அதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஒப்புதல் அளித்ததும் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

02.02.2021 11 : 35 A.M

You might also like