தன்னிடம் கதை கேட்டு வரும் திரைப்பட உதவி இயக்குநர்களுடன் நடத்திய உரையாடல் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். ஒரு சிறு தொகைகூட கொடுக்காமல் கதை கேட்கும் சினிமா உலகம் பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.
இதோ அந்தப் பதிவு…
சென்னையிலிருந்து வாரத்திற்கு இரண்டு உதவி இயக்குனர்களாவது எனக்கு போன் செய்து பேசுகிறார்கள். அனேகமாய் அந்த உரையாடல் இப்படித்தான் இருக்கிறது.
“ஸார், நான் ஒரு உதவி இயக்குனர். திரைத்துறையில் பத்து வருடங்களாக இருக்கின்றேன். உங்களுடைய ஆரம்ப கால வாசகன். நீங்கள் எழுதும் கதைகளை நிறைய படித்து திரைப்படமாக எடுக்க நினைத்து, தயாரிப்பாளர்களை அணுகி உங்கள் கதைகளைச் சொல்கிறேன். அவர்களுக்கும் உங்கள் கதைகள் பிடித்திருக்கிறது.
கோவைக்குச் சென்று ராஜேஷ்குமாரை சந்தித்து பேசி திரைக்கதையை உருவாக்கிக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார்கள். நான் கோவைக்கு வந்து உங்களோடு கதை விவாதம் செய்து ஸ்கிரிப்ட் தயார் செய்யலாமா?”
“தாராளமாக வாருங்கள். அதற்கு முன்னால் அந்த தயாரிப்பாளரிடம் நான் பேச வேண்டும். செல்போன் நம்பரைக் கொடுங்கள். அல்லது அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள்”
“அவர் இப்போது உங்களிடம் பேசமாட்டார் ஸார். நான் உங்களிடம் பேசி கதையை முடிவு செய்த பிறகு தான் அவரிடம் நீங்கள் பேச முடியும். எனக்கு இரண்டு நாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள். கோவை வருகிறேன்.”
“அப்பாயிண்ட்மெண்ட் தருகிறேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு அக்ரிமெண்ட் போடுங்கள். ஒரு அட்வான்ஸ் தொகை கொடுங்கள். அதற்கு பிறகு கதை பற்றி பேசுவோம். முழு ஸ்கிரிப்ட் தயார் செய்யலாம்”
“ஸாரி.. ஸார் தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுக்கமாட்டார். நான் உங்களிடம் பேசி முழுக் கதையை முடிவு செய்த பிறகு தான் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பார்கள்.”
“சரி, ஒரு வேளை நீங்களும் தயாரிப்பாளரும் வேண்டுமென்றே கதை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால் என்னுடைய இரண்டு நாள் உழைப்புக்கு என்ன விலை?”
“நீங்கள் சொல்வது சரிதான் ஸார். தயாரிப்பாளிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்”
உரையாடல் முடிந்துவிடும். அதற்குப் பிறகு அங்கிருந்து எந்த விதமான பதிலும் வராது. கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுப்பவர்கள், எழுத்தாளர்களுக்கு ஒரு சிறு தொகையை அட்வான்ஸாக கொடுத்துவிட்டு கதையைப் பற்றி பேசுவதற்கு என்ன தயக்கம்? எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கும் ஒரு உதவி இயக்குநர் அதே மாதிரி பேசினார்.