ஜூன் – 18: சர்வதேச பிக்னிக் தினம்
சென்னை போன்ற பெருநகரங்களைச் சனி, ஞாயிற்றுக் கிழமைகளின்போது குறுக்கு வெட்டாகக் கடந்து சென்றால் பலவிதமான மனிதர்களை எதிர்கொள்ளலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரையிலான தினசரி வாழ்வின் பரபரப்புகளில் இருந்து விடுபட்டபோதும், அவர்களிடம் ஒருவித அவசரத்தைக் காணலாம்.
அவர்களது பதற்றம், கோபம், எரிச்சலில் கூட நகைச்சுவையையும் கொண்டாட்டத்தையும் உணர நேரிடலாம். ஆண்களை விடப் பெண்களின் முகங்களில் அதிகமும் இதனைக் கண்டுகொள்ள முடியும்.
அப்படிக் கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து குவிகிற மக்களில் பலர் அருகிலுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். குறைந்தது ஆறேழு பேர் என்ற அளவில் தொடங்கிப் பல குடும்பங்கள் வரை ஒன்றிணைந்து வந்திருப்பார்கள்.
மெரினா கடற்கரை தொடங்கி நகரின் அடையாளங்களாகத் திகழ்கிற தலங்களைத் தேடித் தேடி ரசிப்பார்கள். இதற்கு முன்னர் அந்த இடங்களுக்கு, எப்போது, யாருடன் வந்தோம் என்று நினைவுகளை அசைபோடுவார்கள்.
வயதில் மூத்த ஆண்கள், பெண்கள் தங்கள் குடும்பத்து நிலைமைகள் குறித்து பேசுவார்கள். மாமியார்களும் மருமகள்களும் நாத்தனார்களும் சகோதரிகளும் ஒற்றுமையாக ஓரிடத்தில் கூடியிருப்பார்கள்.
சிறார் சிறுமியர் ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடு களைந்து கூடியிருக்கிற அந்த கணங்கள் ஆண்களுக்கும் கூடப் பொருந்தும்.
மேற்சொன்ன சூழலை, சென்னை மட்டுமல்லாமல் எந்தவொரு நகரம், சிறுநகரம், சிறிய சுற்றுலாத் தலங்கள் என எந்த இடத்தோடும் பொருத்திப் பார்க்கலாம்.
நடுத்தர வர்க்கத்தினரைப் பொறுத்தமட்டில் அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, நீர்நிலைகள் நிறைந்த பூங்காக்கள் போன்ற இடங்களைக் காட்டிலும் கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு முன்னாலோ அல்லது அது முடித்ந பின்னாலோ வேறிடங்களுக்குச் செல்வதும் உண்டு.
இந்த சிறு பயணங்களின்போது, அவர்கள் கையோடு தங்களுக்கான உணவையும் எடுத்து வருவார்கள்.
வாளி, தூக்குசட்டி என்று விதவிதமான பாத்திரங்களில் நிறைக்கப்பட்ட உணவை துணிப்பை அல்லது கூடையில் வைத்துக் கொண்டு வருவார்கள். நிழலான இடம் எங்கு இருக்கிறதோ, அங்கு அமர்ந்து சாப்பிடுவார்கள்.
வந்திருக்கும் இடம் பற்றிய ப்ளஸ், மைனஸ்களை விவாதிப்பார்கள். கண்ணாமூச்சி, ஐஸ்பால் தொடங்கி சீட்டாட்டம், கிரிக்கெட், கால்பந்து என்று விதவிதமான விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிப்பார்கள்.
அவ்வளவு ஏன், பதின்ம வயதில் இருக்கும் ஆண், பெண் இருபாலரும் எல்லைக்கோட்டைக் கடந்து ‘கடலை’ போடுவதைக் கடைக்கண் பார்வைகளால் கண்காணித்தபடியே இருப்பார்களே தவிர, பெரிதாகத் தடை இட மாட்டார்கள்.
இந்தச் சூழலை ஒருகாலத்தில் நாம் ‘பிக்னிக்’ என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இன்றும் இது நம்மில் சிலரிடையே சிறிதும் பெரிதுமாக வழக்கத்தில் இருக்கிறது.
இன்னும் சிலர், ‘அதுக்கு கூட நேரமில்லைங்க’ என்றவாறே தங்கள் வாழ்க்கைப் புண்களை மேலும் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
சிறு பயணம்!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து செல்வது.
முக்கியமாக, கையில் வேண்டிய உணவு, தின்பண்டம், விளையாட்டு சாதனங்கள், இதர அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது.
சாய்வு நாற்காலி, போர்வை, உணவுக் கூடைகள், விளையாட்டுப் பொருட்கள் சகிதம் ஒரு குடும்பம் காரில் கிளம்புகிற காட்சிகளைச் சில பழைய ஆங்கிலப் படங்களில் கண்டிருப்போம்.
ஏரி அல்லது குளம் போன்ற நீர்நிலைகளின் அருகே போர்வையை விரித்து, அதில் ஒருபக்கமாகச் சாய்ந்து படுத்தவாறே குடும்பத் தலைவன் அல்லது தலைவி தங்களது குழந்தைகளின் விளையாட்டுத்தனத்தை ரசிப்பதாக அக்காட்சிகள் இருக்கும்.
அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் இன்னொரு பக்கம் இருப்பதுமாக அந்த சட்டகம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அது, ஒரு தலைமுறையின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற ஓவியமாகவும் தெரியும்.
தொலைதூரத்தில் இருக்கிற தலங்களுக்குச் சில நாட்கள் பயணம் செல்வதை விடவும் சிறப்பான அனுபவங்களை இந்த ‘பிக்னிக்’குகள் தரும்.
80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ் என்று இன்றைய ஜென்ஸீ தலைமுறையினரால் அழைக்கப்படுகிறது சித்தப்பாக்கள், மாமாக்கள், சித்திகள், அத்தைகளிடத்தில் இப்படிப்பட்ட பிக்னிக் கதைகள் நிறைய கேட்க முடியும்.
அந்த நினைவுகள் தான் இன்றும் அவர்களைத் தினசரி வாழ்வின் அவஸ்தைகளில் இருந்து மீட்டெடுக்கின்றன ஒன்றாகத் திகழும்.
முக்கியமாக, இதுபோன்ற சிற்றுலாக்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களைத்தான் அதிகம் மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும். குறிப்பாக, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் வெளியுலகின் ஒளியைத் தரிசிப்பது அந்தக் கணங்களில் தான்.
அப்படிப்பட்ட பயணங்கள் ஓராண்டில் அதிகபட்சம் ஆறேழு நிகழ்ந்தால் அதிசயம் தான். ஆனால், அந்த பயணங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் சொல்ல அவர்களிடம் ஓராயிரம் அனுபவங்கள் இருக்கும்.
அக மற்றும் புறவுலகச் சிந்தனைகளாக இருக்கிர காரணத்தால், அவற்றின் வீரியம் அதிகம். அவற்றைக் கிண்டி, கிளறிச் சொல்ல வைத்தால், அவர்கள் முகத்தில் தெரிகிற பரவசம் இதுவரை நாம் காணாததாக இருக்கும்.
கொண்டாடுவோம் வாழ்வை..!
ஒரு வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கும் தினசரி வாழ்வை மேலும் சிறப்பானதாக மாற்ற, ஒரு சிறு ஓய்வு அல்லது இடைவெளி தேவை. அதனைத் தருபவை இந்த ‘பிக்னிக்’குகள்.
மிகப்பெரிய மலை, காடு, கடற்பரப்பு, ஓங்கி உயர்ந்து நிற்கிற கட்டுமான அதிசயங்களைக் காணச் சில நாட்களும் பெருமளவு பணமும் செலவு செய்வது ஒருவகை பயண அனுபவம் என்றால், இவை வேறுவிதமான நினைவுகளை நம்மிடத்தில் பொதித்து வைப்பவை. குறைந்த செலவில் நிறைவான திருப்தியைத் தரவல்லவை.
குறிப்பாக, நாம் அடிக்கடி காண இயலாத உறவுகளை, நட்புகளைப் பார்த்து பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறக் கொள்ள உதவுபவை.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்படம் பார்க்கத் திரையரங்குகளுக்கு இப்படிச் சிற்றுலா சென்று வந்த அனுபவங்களும் சிலரிடம் இருக்கும். இன்றோ, தியேட்டர் வாசலிலோ ‘ஹோம் புட் அனுமதி இல்லை’ என்று கையை விரித்து விடுகின்றனர்.
கல்லூரியை ‘கட்’ அடித்துவிட்டு, தியேட்டருக்குள் டிபன்பாக்ஸில் இருக்கும் உணவைத் தின்றபடி படம் பார்த்து ரசித்த அனுபவம் எனக்குண்டு. அது போன்ற சிற்றுலாக்களின் தடம் உங்களிடமும் படிந்திருக்கும்.
இன்று எந்தவொரு இடத்திற்கும் கையில் உணவை எடுத்துச் செல்வது என்பதே ’காட்டுமிராண்டித்தனமாக’ நோக்கப்படுகிறது. பகிர்ந்துண்ணுதல், வேறுபட்ட சுவைகளை அறிதல் போன்றவை அரிதாகி வருகிறது.
‘போற இடத்துல பேமாஸான ஓட்டல்ல சாப்பிடுறதுக்கு இல்லாம, யாரு சாப்பாடு சட்டிய தூக்கிட்டு திரியறது’ என்ற மனப்பாங்கு பெருகியிருக்கிறது.
அதுவே சமூக அந்தஸ்து அளிக்கும் என்றும் சிலர் நினைக்கின்றனர். பிறகு, வேண்டாத இடங்களில் கையை நனைத்துவிட்டு ‘ஃபுட் பாய்ஸன் ஆயிடுச்சு’ என்று ஓய்வில் இருக்க நேரிடுவதும் நிகழ்கிறது.
போலவே, இன்று நம் வாழ்வில் ‘சின்ன’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லாமே பெரிதாகத்தான் வேண்டும். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை வேறுவேறாகத் திரித்துக் கொண்டதன் விளைவு இது.
ஒரு குயிலின் குரலைத் தொடர்ந்தாற் போலக் கேட்பதும், வெயிலின் கொடுமை தாங்காமல் தகித்து நிற்கையில் தென்றல் காற்று நம்மைத் தொடுவதும், மனதுக்குள் நறநறக்கும் புழுக்கம் எந்த நொடியில் காணாமல் போனது என்றுணராதவாறு மறைந்து மங்குவதும் இந்த ‘பிக்னிக்’குகளில் நிகழும்.
இது பற்றிய விவரணைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.
‘பெரியன’வற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் சிறிதான விஷயங்கள், பொருட்கள், தருணங்களுக்கும் இடமுண்டு.
மேகம் சூழ்ந்த வானில் திடீரென்று ஓரிடத்தில் பீறிடுகிற சூரிய ஒளியின் கீற்றுகள் கிழிக்கிற கோடுகள் தருகிற உற்சாகத்திற்கு ஈடானவை அந்த அனுபவங்கள்.
அவ்வாறு சென்று வந்தபின்னர் நாம் அடையும் உத்வேகத்தையும் உணர்வெழுச்சியையும் வார்த்தைகளில் அடக்க இயலாது.
அடுத்த ‘பிக்னிக்’ செல்கிற உந்துதலைப் பெறும் வரை, அது நம்முள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்..
ஒரு தலைமுறையின் வாழ்வு குறித்து ஆயிரமாயிரம் முறை பிரசங்கம் செய்து உணர்த்துவதை, ஓரிரு பிக்னிக்குகள் மிக எளிதாகச் சாதித்துவிடும்.
சமூக, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளால் வெவ்வேறு திசைகளில் நிற்பவர்கள் என்ற விதிவிலக்கு இந்த விஷயத்தில் ஒருபோதும் செல்லுபடியாகாது.
இன்று, சர்வதேச பிக்னிக் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 18ஆம் தேதி இது கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா என்று பயணித்த பிக்–னிக் எனும் வார்த்தை நமக்கு மூத்த தலைமுறையினர் வரை உயிருடன் இருந்தது. இன்று அது மெல்லத் தன்னிடத்தை இழந்து வருகிறது.
வாருங்கள்..! சில பல சிற்றுலாக்கள் சென்று அதன் வீரியத்தை மீட்டெடுப்போம்.. சுற்றுலாக்களுக்கு மத்தியில் சிற்றுலாக்களுக்கும் இடமளிப்போம்.. தினசரி வாழ்வின் சிடுக்குகளில் இருந்து நம்மை நாமே சீராக்கிக் கொள்கிற வித்தையைக் கற்றறிவோம்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்