‘டேட்டூ’ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

சர்வதேச அளவில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து இந்த தினத்தைக் கடைப்பிடிக்க முடிவெடுத்தன.

ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்தவும், ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலக்கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இயலாமல் போனது. இரத்த பரிமாற்றத்திலும் எதிர் விளைவுகள் ஏற்பட்டன.

இதையடுத்து 1901-ம் ஆண்டு காரல் லேண்ஸ்டைனர் என்பவர் இரத்ததில் உள்ள A, B, AB, O வகைகளை முதன்முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.

ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்த தானம் செய்வதன் மூலம், 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

ஒரு மனிதரின் உடலில் 4 முதல் 6 லிட்டர்கள் வரை இரத்தம் உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 6.8 மில்லியன் மக்கள் இரத்தத்தைக் கொடையாக வழங்குகின்றனர்.

பல சமூக வளைதளங்கள், குழுக்கள், இரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட இரத்தம், உரியமுறையில் சேமிக்கப்படுகின்றது.

18 முதல் 60 வயதுக்கு உட்பட்டு, 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும்.

மருத்துவமனைகளில் இரத்தம் பெறப்படும் முன் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார்.

2025-ம் ஆண்டு உலக ரத்த தான தினத்தின் கருப்பொருள் ‘ரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள், ஒன்றாக நாம் உயிர்களைக் காப்பாற்றுவோம்’ என்பதாகும்.

இந்த கருப்பொருள் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் மக்களுக்கு வலியுறுத்துகிறது.

ரத்தம் தானம் செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்கும் செயலாகும். இது சமூகங்களை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே ஒற்றுமையின் உணர்வை ஏற்படுத்துகிறது.

ரத்த தானம் செய்வதால் பெறுபவர் மட்டுமல்லாமல், கொடையாளர்களும் பயன்பெறுகிறார்கள். ரத்த தானம் செய்வதால் உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.

இந்த தினத்தில் ரத்த தானம் செய்வது குறித்த முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன.

ஒருவர் உடலில் இருந்து 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக, நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடுசெய்யப்பட்டு விடுகிறது. ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்ய முடியாது?

சில நேரங்களில், உடல்நிலை ரீதியான சில காரணங்களுக்காகவும், சில மருத்துவ காரணங்களுக்காகவும் சிலர் ரத்த தானம் செய்ய முடியாது.

எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. மூன்று மாதத்திற்கு முன் மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. ரத்த தானம் செய்ய உங்கள் எடை 45 கிலோவிற்கு குறைவாக இருக்கக்கூடாது.

உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்கக் கூடாது. உடலில் tattoo குத்தியவர்கள், முதல் 6 மாதங்களுக்கு தானம் செய்ய முடியாது. 

புற்றுநோய்கள், இதய நோய், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்பவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது.

இன்றைய காலகட்டத்தில், இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவது மிகவும் முக்கியம், மக்கள் உயிரின் மதிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இரத்த தானம் செய்ய வேண்டும்.

அது யாருடைய உயிரையாவது காப்பாற்ற உதவும். இந்த நாளில், ரத்த தானம் செய்வது பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, மேலும் பலருக்கு ரத்த தானம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்.

– யாழினி

You might also like