நந்தன் கதையல்ல, காலம் காலமாக காணும் நிஜம்!

நெகிழ்ந்த நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். பல மூத்தக் கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த கதைக்கான விருதை நந்தன் படத்துக்காக இயக்குநர் இரா. சரவணன் பெற்றார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய இரா.சரவணன், ” ‘நந்தன்’ படம் ஓடிடி-ல ரிலீஸ் ஆன நேரம்… ஒரு போன் வருது.

“சரவணன் சார்… நான் ரஜினிகாந்த் பேசறேன்”னு மறுமுனையில…

“இப்படியெல்லாம் நடக்குதான்னு யாராச்சும் கேட்டீங்கன்னா, உங்க கையைப் பிடிச்சுக்கிட்டுப் போய் காட்டத் தயார்” என்ற டைட்டில்ல ஆரம்பிச்சு கடைசி வரைக்கும் சொன்னதும் மட்டுமில்லாம, “அந்தத் தலைவர்களையெல்லாம் காட்டுகிறேன் பார்”னு காண்பிச்சதும் மிரண்டுட்டேன் சார். அப்படின்னு ரஜினி சார் சொன்னப்ப, உண்மையாலுமே ரஜினி சார்தான் பேசுறாரான்னு திகைச்சுப்போயிட்டேன்.

இங்கு ‘நந்தன்’ படக்குழுவினர் அனைவரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. குறிப்பாக, என்னுடைய வட்டிக்கடை, என்னுடைய ஆசுவாசம், என்னுடைய சுமைதாங்கி என் பொண்டாட்டி கலாவுக்கு ரொம்ப நன்றி.

உண்மையிலேயே ஒரு காகிதமாக முடங்கிப்போயிருக்க வேண்டிய ‘நந்தன்’ கதை இவ்வளவு பெரிய ஆயுதமாய், படைப்பாய் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்புகிற படைப்பாய் மாத்தினது சசிகுமார் என்ற ஒற்றை சக்திதான்.

நான் தயாரிப்பாளரைத் தேடிக்கிட்டு இருந்தப்போ, தயாரிப்பாளராக வந்தார். ஹீரோ தேடிக்கிட்டிருந்தப்போ ஹீரோவா வந்தார்.

எனக்கு எல்லாமுமாக இருந்து ‘நந்தன்’ படத்தை இவ்வளவு பெரிய வீரியமான படைப்பாக மாற்றிய சசிகுமார் சாருக்கு இந்த விருது சமர்ப்பணம்.

சிறந்த கதைக்கான விருதை ‘நந்தனு’க்கு விகடன் கொடுத்திருக்கிறது. இது சிறந்த கதை அல்ல. நம் கண் முன்னாடி காலம் காலமாக நாம் பார்க்கின்ற நிஜம்.

பதவிக்கு வந்து அதிகாரத்தை, அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடுகிற பல தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய துயரங்களைத் தொகுத்துத்தான் ‘நந்தன்’ படத்தை எடுத்தோம்.

‘நந்தனு’க்குக் கிடைக்கிற அங்கீகாரம் மாதிரி மிச்ச நந்தன்களாக வாழும் தலித் தலைவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று ரொம்ப நாளாக வருத்தம் இருந்தது.

ஆனால், சமீபத்துல குடியரசு விழாவில் 50-க்கும் மேற்பட்ட தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள், முதன்முறையாக எங்க கையால கொடி ஏற்றினோம்.  ‘நந்தன்’ சாதித்தது இதுதான் என அவர்களுடைய பதிவில் அதை போட்டப்போ ரொம்ப ஆசுவாசமாகிவிட்டது.

தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுடைய விடிவுக்கு விகடன் விருது மிகப்பெரிய போர்க்குரலாக இருக்கும் என முழு மனதாக நம்புகிறேன்.” என்றார்.

– சி. அர்ச்சுணன்

நன்றி: விகடன்

#directorerasaravananspeech #இயக்குநர்இராசரவணன் #இயக்குநர்அவினோத் #சசிகுமார் #நந்தன் #nandhanmovie #nandhan #directoravinoth #sasikumar

You might also like