பாலு சார் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்!

நினைவுகளைப் பகிர்ந்த உதவி இயக்குநர் மணிஜி

ரொம்ப நாட்களாக எழுத நினைத்த பதிவு. இன்றுதான் வாய்த்தது. வருடம் 1982. என் அக்காவின் திருமணத்துக்காக தஞ்சையிலிருந்து நண்பர்கள் மூவர் வந்திருந்தனர்.

எல்லோருக்குமே ராஜா அல்லது எஸ்.பி.பி-யைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ராஜாவைப் பார்ப்பது முடியாத காரியம். பாலு சார் வீடு காம்தார் நகரில் இருந்தது தெரியும். அந்த வழியாக அடிக்கடி போயிருக்கிறேன்.

மாலை ஐந்து மணி வாக்கில் வீட்டுக்குப்போனோம். வாசலில் ஒரு நேப்பாள் கூர்க்கா. அவனிடம் கேட்டபோது ஏதோ சொன்னான். அதற்குள் மாடி பால்கனியில் இருந்து பாலு சார் எங்களை உள்ளே விடச்சொன்னார்.

வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்திருந்தோம். டீ வந்தது. பின்னாடியே ஒயிட் & ஒயிட்டில் பாலு சார்… நம்ம பயலுவளுகளுக்கு நம்பவே முடியவில்லை. என்னை தெய்வம் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள்.

மிகவும் நன்றாகப் பேசினார். கிளம்பும்போது ரெக்கார்டிங் பார்க்கறிங்களான்னு கேட்டார். விஜயா கார்டன் வந்திருங்கன்னு சொல்லிவிட்டு ஒயிட் அம்பாசிடரில் ஏறிப்போய்விட்டார்.

விஜயா கார்டன் வாசல் செக்யூரிட்டிடம் சொல்லியிருக்கிறார். அவன் எங்களை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துப் போய்விட்டான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கிருந்தோம்.

விடைப்பெற்று கிளம்பும்போது ஆட்டோகிராப் போட்டு வழி அனுப்பிவைத்தார். மறுநாள் காலை அதே செக்யூரிட்டியே இருந்தான். (முதல் நாளே கேட்டு வைத்திருந்தோம்) இன்ப அதிச்சியாக ஸ்ரீதேவியின் ஹிம்மத்வாலா ஷூட்டிங் பார்த்தது பயலுவளுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.

அதன்பிறகு பாலு சாரை பார்த்தது உரிமைகீதம் படத்தின் “மெல்ல மெல்ல நடந்துவந்தது பாதம் பாடல் ரெக்கார்டிங். அதன் பின் நாலைந்து முறை பார்த்திருப்பேன். அப்போது நான் ஒரு கடைநிலை உதவி இயக்குநர். நம் இடம் அவ்வளவே அப்போது.

காலம் ஓடியது. எஸ்.பி சரண் ஒரு வெப் சீரிஸ் இயக்கினார். அதில் நண்பர் Cable Sankar உடன் எழுத்துப் பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. சரணின் கேபிடல் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு பாலு சார் அடிக்கடி வருவார்.

ஆனால், எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒருமுறை நான் அங்கு இருந்தபோது வந்தார். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தபோது அவசரமாக கிளம்பி விட்டார்.

சரி இன்னொரு முறை எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் கால(ம்)ன் காத்திருக்கவில்லை. கொரொனா.

இரண்டு வாரங்கள் கழித்து எஸ்.பி சரணிடமிருந்து வாட்சப்பில் ஒரு செய்தி. பாலு சாரின் பதினாறாம் நாள் காரியம் முடிந்து சாப்பிட வரச்சொல்லி அழைப்பு.

அதே வீடு… அதே வாசல்… பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. என்ன அந்த நேப்பாள் கூர்க்கா மிஸ்சிங். 1982 ஆம் ஆண்டு நின்ற அதே இடத்தில் நின்று மேலே பால்கனியைப் பார்த்தேன். பாலு சார் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like