இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!

ஜூன் 12 : தேசிய சிவப்பு ரோஜா தினம்.

பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.

சொல்ல முடியாத வார்த்தைகளைக் கூட இந்த சிவப்பு ரோஜா மறைமுகமாக வெளிப்படுத்திவிடும்.

ஒருவரிடம் காதலைப் பகிர்ந்துகொள்ள பரிசாகக் கொடுப்பது இதைத்தான். ஆண், பெண் பேதமின்றி அனைவரும் ரசிக்க கூடிய மலர் என்றால் அது சிவப்பு ரோஜாவாகத்தான் இருக்க முடியும்.

வாழ்த்து கூறுவது, காதல் சொல்வது, ஒருவரை வரவேற்பது, நன்றி கூறல் என நமது மகிழ்ச்சியான அத்தனை தருணத்திலும் உடன் இருந்து நமக்கு பெருமை சேர்ப்பது ரோஜா மலர்.

விலைவுயர்ந்த பரிசுகள் எல்லாம் இந்த ரோஜாவிடம் தோற்றுப் போகும் அளவுக்கு அத்தனை ஈர்ப்பைக் கொண்டது.

கொடுப்பவரும், வாங்குபவரும் சேர்ந்து மகிழ்விக்க முடியும் என்றால் அது இந்த ரோஜாவல் மட்டுமே சாத்தியம். பூலோகத்தின் மாய மலர் என்றும் இதைக் கூறலாம். ஏழை முதல் பணக்காரர்கள் வரை வாங்கக் கூடிய மலராகவும் இருக்கிறது.

விலை மலிவாகக் கிடைத்தாலும் பெரும்பாலும் அதன் இருப்பிடம் நவநாகரிக மனிதர்களிடமும், பணக்காரர்களின் கைகளில் பூங்கொத்தாகவும் சட்டையில் ஒற்றை ரோஜாவாகவும் அலங்கரிக்கிறது.

ஏழைகளின் கைகளில் தவழ்ந்து முடிசூடா ராணியாக உலக அளவில் பெரும்பாலான பணக்காரர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அலங்கார மலராக அழகு சேர்க்கிறது.

இத்தனைப் பெருமை மிக்க ரோஜாவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 12ஆம் தேதி தேசிய சிவப்பு ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில், ஜூன் மாதம் தான் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் மற்ற நாடுகளை விடவும் இந்த நாட்டில் தான் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தேசிய சிவப்பு ரோஜா தின வரலாறு:

இதன் தொடக்கம் கொஞ்சம் மர்மமாக இருந்தாலும், பெரும்பாலானோர் 2000-களின் முற்பகுதியில் தொடங்கியதாகக் கூறுகின்றனர். எகிப்து முதல் சீனா வரையிலான பண்டைய நாகரிகங்களில் ரோஜா இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன.

ஐரோப்பிய கதைகள், கவிதைகளின் வழியே சிவப்பு ரோஜா பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் விக்டோரியன் சகாப்தம் தான், சிகப்பு ரோஜாக்கள் உச்ச நிலைக்கு வரக் காரணமாக இருந்தது எனலாம்.

பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பகால கலாச்சாரங்களில் திருமண விழாக்களில், ஆடைகளிலும், மாலைகளிலும் அலங்காரங்களாக சிகப்பு ரோஜாக்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த கலாச்சாரம் விரிவடைந்து சிவப்பு ரோஜா இறுதியில் காதல் மற்றும் காதலுக்கான அடையாளமாக அறியப்பட்டது.

பெரும்பாலான ரோஜாக்கள் நறுமணத்திற்காகவும், அழகு சாதனப் பொருட்களிலும், ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கவும் வளர்க்கப்படுகிறது.

ஆரோக்கியமான ரோஜாப் பூ கொண்டு உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொடுக்க முடியும். சாலட், சூப், தேநீர், ஜாம், ஊறுகாய், சிரப் மற்றும் ரோஜா இதழ்களை கேக் மற்றும் பேஸ்ட்ரியின் மேல் ஒரு அலங்காரமாகவும் சேர்க்கலாம்.

ரோஜா இதழ்களைக் கொண்டு சுவையான, ஆரோக்கியமான மூலிகைத் தேநீர் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

ஆரோக்கியமான ரோஜாப் பூ தேநீர்!

தேவையான பொருட்கள்:

சிவப்பு ரோஜாப் பூ – 1

தண்ணீர் – 200 மில்லி

தேன் அல்லது பனங்கற்கண்டு – தே.அ.

செய்முறை: புதிதாக பறித்த ரோஜா அல்லது காய்ந்த ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ரோஜா இதழ்களைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடாக குடிக்க விரும்பினால் பனங்கற்கண்டு தண்ணீர் கொதிக்கும்போது போடவும். தேன் சேர்ப்பது என்றால் தேநீர் மிதமான சூடாக இருக்கும் போது சேர்த்துக் குடிக்கலாம்.

ரோஜாப் பூ தேநீரின் நன்மைகள்:

இந்தத் தேநீரானது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பதற்றமான மனநிலையை அமைதிப்படுத்தி, இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறாது. 

இந்தத் தேநீரில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது.

இவை உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

ரோஜா தேநீர் தினமும் எடுத்துக் கொள்ளும்போது சருமத்தை மென்மையாக்கும், முகப்பருக்கள், கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்து மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதால் ரோஜாப் பூ தேநீர் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பானம் பார்க்கப்படுகிறது.

தேசிய சிவப்பு ரோஜாப் பூ தினமான இன்று (ஜூன்-12) சிவப்பு ரோஜாப் பூவை ரசிக்க மட்டும் இல்லாமல் ஆரோக்கிய உணவாகவும் சேர்த்துக் கொள்வோம்.

– யாழினி சோமு

You might also like