உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம்.

நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி என்கிற பெயரில் நடைபெறும் உருவக்கேலிகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

இது தொடர்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை உதாரணமாகக் கூறலாம்

இந்தப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி தொடர்பாக நடிகை தேவயானி அண்மையில் அளித்த பேட்டியில் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

காரணம் அதில் அவரது கணவர் ராஜகுமாரன் நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அதில் சந்தானம் காமெடி என்ற பெயரில் ராஜகுமாரன் மற்றும் அவரது நண்பர்களை மிகவும் மோசமாக உருவ கேலி செய்வார்.

அதில், “அவனை சிரிக்க வேண்டாம்னு சொல்லுடா.. சிரிக்கும் போது அவன் மூஞ்சி அசிங்கமா உள்ளது” என்பார்.

இன்னொரு காட்சியில், “மைதா மாவுல செஞ்ச மனிதக் குரங்கு, காட்டில் இருந்து தப்பித்து வந்த கருங்குரங்கு, இது என்ன ஜாதி குரங்கு என்றே தெரியவில்லை. இவனையெல்லாம் குரங்குனு சொல்லி நான் குரங்கை கேவலப்படுத்துவேனா?” என்கிறார்.

இதையடுத்து, “ஏன்டா அட்டை பூச்சி வாயா.. அந்த மூஞ்சியாவது நல்லா இருக்குமா?.., ஏன் டா பழைய சோத்துல தயிர் ஊத்துன மாதிரி ஒரு மூஞ்சி நீ எல்லாம் லோக்கலா? இவனை முட்டிபோட வைத்து முதுகில் பாண்டு கவிழ்த்து பாரு 400 வருசம் வாழ்ந்த ஆமை மாதிரி இருப்பான்” என்று கூறுவார்.

இந்தக் காமெடி காட்சிகளைத்தான் தேவயானி தனக்கு வருத்தத்தை தந்தது என்று கூறினார்.

தேவயானி வருத்தப்படுகிறார் என்பது குறித்து சந்தானத்திடம் கேட்டபோது, நான் தனிப்பட்ட முறையில் தேவயானியின் கணவரை விமர்சிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தை தான் விமர்சித்தேன் என்று கூறினார்.

சந்தானத்தின் இந்த பதிலை எஸ்கேப்பிசம் என்று கூட சொல்லலாம்.

காரணம், தேவயானி போன்ற நடிகைகளுக்கு ஊடக வெளிச்சம் உள்ளது. அதனால் அவர் தனது வருத்தத்தை வெளிக்காட்டியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் அந்தக் காட்சியில் நடித்த நான்கு பேரின் உருவ ஒற்றுமையுடன் ஒத்துப் போகிறவர்களுக்கு சந்தானம் பயன்படுத்திய வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமல், நாங்கள் ஏற்கனவே ஸ்கிரிப்ட் கொடுத்துவிட்டோம் என்று விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

இதைத் தவறு என்று சுட்டிக் காட்டுவது இந்த சமூகத்தின் கடமை. சந்தானம் எவ்வளவோ நல்ல நல்ல காமெடிகளைக் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை வேறு, ஒருவரை உடல் ரீதியாக விமர்சனம் செய்து அதன் மூலம் மக்களை சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது அறிவார்ந்த செயலாக தெரியவில்லை.

இதேபோல் கவுண்டமணி உள்ளிட்ட சில காமெடி நடிகர்களும் இந்த பாணியை பெரும்பாலன படங்களில் பின்பற்றியதும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான்.

அப்துல் கலாம்:

உருவக்கேலியை சந்தானம் மட்டுமல்ல, எந்த காமெடி நடிகர் வெளிப்படுத்தினாலும் அதை காமெடி என்ற பதத்தில் வரிசைப்படுத்த முடியாது.

உருவக்கேலியை காமெடி என்ற பதத்தில் வைக்கலாம் என்று சந்தானத்தைப் போல யாராவது சொல்வார்களேயானால், அவர்களுக்கு சென்னை, கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற பள்ளிச் சிறுவன் ஊடகம் ஒன்றில் பேசுகையில்,

“எல்லோருக்குள்ளும் ஒரு கஷ்டம் இருக்கும், என்னைக் கூட எல்லோரும் பல்லன் பல்லன் என்றுதான் கூப்பிடுவார்கள், அதற்காக நான் அனைவரையும் பிடிக்கவில்லை என்று கூற முடியுமா?” என்று கேட்பார்.

அந்த சிறுவன் தனக்குள் இருக்கும் வலியை மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டார். ஆனால் அது மிகப்பெரிய மாஸ்டர் கிளாஸ்.

– நன்றி: ஃபிலிம் பீட்

You might also like