மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம்
’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட வாழ்வில் உருளைக்கிழங்குக்குக் கிடைத்துள்ள இடம்.
’உருளைக்கிழங்கு இருந்தா போதுமே, சட்டுன்னு ஒரு பொறியல் பண்ணிடலாமே’ என்பதுதான் சமையற்கட்டில் அவசர அவசரமாக நுழைபவர்களின் முதல் எண்ணமாக இருக்கும். முக்கியமாக, சிறு குழந்தைகள் இருக்கிற வீடுகளில் காய்கறிப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது உருளைக்கிழங்குதான். அதனை அவித்தோ, பொறித்தோ, வறுத்தோ சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது.
பெரியவர்களும் அதனை விரும்பத்தான் செய்கின்றனர். ஆனால், ‘வாய்வு பிரச்சனை வந்துடுமோ’ என்ற யோசனை அவர்களது கைகள் உருளைகிழங்கைத் தீண்டவிடாமல் தடுக்கின்றன. இதற்கு நடுவே, ’உருளைக்கிழங்கை இப்படிச் சமைக்க வேண்டும், அப்படிச் சமைக்க வேண்டும்’ என்று ஆலோசனைகள் கூறும் வீடியோக்கள் வேறு நம் சூழலைச் சுற்றி வருகின்றன.
‘உருளைக்கிழங்கு மூட்டை மாதிரி இருக்கிறான்/ள்’ என்று சிலரைக் கிண்டலடித்தாலும், ‘உருளைக்கிழங்கை வச்சே வருஷம் முழுக்க சமையல் பண்ணிருவாங்க’ என்று ‘ட்ரோல்’ செய்தாலும், இன்று பலரது உணவில் உருளைக்கிழங்குக்கு ஒரு இடம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆக, ‘உருளைக்கிழங்கு இல்லா உலகு சாத்தியமில்லை’ என்ற நிலை வந்துவிட்டது என்பதே உண்மை. அப்படிப்பட்ட உருளைக்கிழங்கின் சிறப்புகளைக் கொண்டாடத்தானே வேண்டும்.
எங்கிருந்து வந்தது?
லத்தீன் அமெரிக்க நாடுகளைக் கொண்ட தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் உருளைக்கிழங்குகள் அதிகளவில் விளைந்தன. பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த காலனியாதிக்கத்தின் விளைவால், இவை ஐரோப்பாவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதன் நீட்சியாக, உலகம் முழுக்க உருளைக்கிழங்கு சாகுபடி பரவியது.
கி.மு. 8000 ஆண்டில் உருளைக்கிழங்கு முதன்முதலில் பயிரிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கு முன் எத்தனை ஆண்டுகள் இந்த பூமியில் அவை தானாக முளைத்தன என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 5,000 உருளைக்கிழங்கு வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொதுவாக இவை சிவப்பு, பழுப்பு கலந்த சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா அல்லது நீலம், நீள் வடிவம் மற்றும் சிறிய ரகத்தில் அமைந்தவை என்று 7 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
நம்மூரில் மஞ்சள் நிற உருளைக்கிழங்குகளே அதிகம் உணவில் பயன்படுத்தப்படுகின்றன. வட இந்திய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தொழிலாளர் வர்க்கம் இந்த உருளைக்கிழங்கைப் பத்து கிலோ, இருபது கிலோ என்று மொத்தமாக வாங்குவதைக் காண முடியும். ஆக, இது எளிய உணவு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அந்த உருளைக்கிழங்குகளைக் காட்டிலும் களி மண் அல்லது செம்மண்ணில் விளைந்த, தோல் உரியும் தன்மை கொண்ட உருளைக்கிழங்குகள் நமது பாரம்பரிய சமையலுக்கு ஏற்றவை என்பது எனது எண்ணம். இது சுய அனுபவத்தின் வெளிப்பாடு.
பெரும்பாலும் இந்த உருளைக்கிழங்குகள் நீலகிரி மற்றும் மேற்கு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன.
சிறப்புகள் என்ன?
உருளைக்கிழங்குகள் எப்படிப்பட்ட சூழலிலும் விளையும். குறைவான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவை தளைக்கும். பசுமைக்கூட வாயுக்களை குறைந்த அளவில் வெளிப்படுத்துவதால் வானிலை மாற்றத்திற்கு உகந்தவை என்கின்றனர் வேளாண் நிபுணர்கள்.
இன்று உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உருளைக்கிழங்கை உண்கின்றனர். நெல், கோதுமைக்கு அடுத்தபடியாக இதையே அதிகளவில் நாம் உண்டு வருகிறோம்.
உணவுப் பாதுகாப்பில் நிறைவை அடைவதற்கும், பட்டினி தவிர்ப்பு நிலையை எட்டுவதற்கும், நீடித்த வேளாண் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உருளைக்கிழங்கு சாகுபடி பெருமளவில் உதவிகரமாக உள்ளதாகச் சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இது போக, ஒரு உணவாக உருளைக்கிழங்கு செய்யும் நன்மைகள் பல.
உருளைக்கிழங்கில் கார்போஹட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் உள்ளது. அதனால், இதனை அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை கூடும். அதேநேரத்தில், இதிலுள்ள சத்துக்கள் நம் உடலைச் சீர்படுத்த உதவுகின்றன என்பதே உண்மை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதில் வைட்டமின் சி உள்ளது. அதிகளவில் இதில் இருக்கும் பொட்டாசியம், மனிதர்களின் இதயச் செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நலம் தருகிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றுக் கோளாறுகளைச் சரி செய்யக் கூடியது. வயிற்றுப் புண் தொடங்கி மலச்சிக்கல் பிரச்சனை வரை பலவற்றைச் சீராக்கவல்லது. அதேநேரத்தில், இதனைத் தோலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பலன் அதிகம் என்பதையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும்.
’உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா’ என்று அதிகளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேற்சொன்ன அத்தனை நன்மைகளையும் எதிர்த்திசைக்குக் கொண்டு செல்ல அது துணை நிற்கும்.
அதிகளவிலான பொட்டாசியம் உடலில் சேர்ந்தால் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும். ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதய நோய் அபாயத்தைப் பெருக்கும். அதிகளவிலான கார்போஹைட்ரேல் கீல்வாத நோயாளிகளுக்கு ஊறு விளைவிக்கும். இது போக அதிகளவில் சாப்பிடும்போது எடை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
அதனைத் தவிர்க்க, உருளைக்கிழங்கு அவித்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் மூழ்கடித்து வறுப்பது, பொரிப்பது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
பச்சை அல்லது நீலம் வண்ணம் தெரிகிற உருளைக்கிழங்குகள், முளை விட்டவை ஆகியன சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
ஆக, உருளைக்கிழங்கில் நமக்கு நன்மை தருபவற்றை மட்டுமே கண்டறிந்து, தேடி எடுத்து உணவில் அளவோடு சேர்த்துக் கொண்டால் நலமாக இருக்க முடியும்.
கடந்த ஆண்டு முதல்..!
உலகின் உணவு உற்பத்தியில் பெருமளவு பங்களித்து வருகிறது உருளைக்கிழங்கு. அதன் ஊட்டச்ச்சத்து குறித்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல், கலாசார மதிப்பீடுகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘உலக உருளைக்கிழங்கு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் ஐநா இதனைச் செயல்படுத்தி வருகிறது.
2008-ல் ‘சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு’ கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அதன் நீட்சியாக இது அமைந்துள்ளது.
பட்டினி மற்றும் வறுமையை எதிர்கொள்வதில் உருளைக்கிழங்கின் பங்கு அளப்பரியது. மேலும் சிறு விவசாயிகள் இதனைச் சாகுபடி செய்து பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இதுபோன்ற பல சிறப்புகளை முன்வைத்து, உலகம் முழுக்க ’உலக உருளைக்கிழங்கு தினம்’ கொண்டாடப்படுகிறது.
2030-ம் ஆண்டுக்குள் 750 மில்லியன் டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, உலகம் இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
தற்போது 159 நாடுகளில் சுமார் 17.8 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில், ஆண்டுதோறும் 375 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
’வரலாற்றை வடிவமைப்போம், எதிர்காலத்திற்கு உணவளிப்போம்’ என்பது 2025-ம் ஆண்டு ‘உலக உருளைக்கிழங்கு தினத்திற்கான’ கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
வாருங்கள்.. உருளைக்கிழங்கை உணவில் தினம் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், அதன் பின்னிருக்கும் விஷயங்களையும் அறிந்து, தெரிந்து சிறப்பிப்போம்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்