மக்களுக்குத் தேவை நல்லாட்சி!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15

 ******

“அரசுமுறை செய்க களவில் லாகுக”

        – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2

புலவர்: ஓரம்போகியார்
திணை: மருதம்
சொற் பிரிப்பு : களவு இல்லாகுக

நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார்.

அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம் இருப்பதற்காக அரசு சரியாக முறையாக இயங்க வேண்டும்.

அரசன் என்று சொன்னால் அது அரசின் தலைமையைக் குறிக்கும். எனினும் இத்தலைமை அரசனாகவும் இருக்கலாம்.

காலச் சூழலில் வேறு யாரும்கூட அரசின் தலைமையாக இயங்கலாம். எனவேதான் அரசன் என்றோ, வேந்தன் என்றோ, மன்னன் என்றோ சொல்லாமல் பொதுவாகத் தலைமையைக் குறிப்பதால் புலவரின் தொலைநோக்கு உணர்வை அறியலாம்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (திருக்குறள், ௫௱௪௰௧ – 541)

– என்கிறார் திருவள்ளுவர்.

குற்றச் சூழல், குற்றம் சாட்டப்பட்டவரின் தன்மை, முன் வரலாறு, குற்றப் பின்னணி முதலியவற்றை ஆராய்ந்து, வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் கண்ணோட்டம் கொள்ளாது,

விருப்பு, வெறுப்பு இன்றி நடுநிலையோடு அற நூல், சட்ட நூல் வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே முறைமையான ஆட்சி என்கிறார் திருவள்ளுவர்.

அத்தகைய அறமுறை ஆட்சிதான் வேண்டும் என்கிறா் புலவர் ஓரம்போகியார்.

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் கடமையுணர்வு, நல்லொழுக்கம், நற்பண்பு கொண்டு சிறக்க வாழ வேண்டுமென்பது தமிழ் மகளிர் விழைவு.

எனவேதான் காதல் வாழ்க்கையில் இருந்தாலும் நாட்டு நல்வாழ்க்கை குறித்தும் தலைவியர் தெரிவிக்கின்றனர். எனவேதான் புலவர் தலைவியின் விருப்பமாக நாட்டு நலன் குறித்த வேண்டுகோள்களைத் தெரிவிக்கிறார்.

“அரசு முறை செய்தல்” என்றால், அரசு செய்யவுள்ள செயலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து நடைமுறைப்படுத்துதல் என அசியலமைப்பு வல்லுநர்கள் விளக்குகின்றனர்.

ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கத்துடன் (Legislation) அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றும் அல்லது மாற்றும் அல்லது நடைமுறைப் படுத்தும் சட்டவாக்கம், சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிகார அமைப்பு, அரசு அல்லது அரசாங்கம் சட்டங்களை இயற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றின் செம்மை நிலையைக் குறிப்பது.

இஃது அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், சட்டங்கள், விதிகள், கொள்கைகளை உருவாக்குதல், அவற்றிற்குரிய ஆணைகளைப் பிறப்பித்தல், நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் ஆகிய அரசின் செயல்பாட்டையே குறிக்கிறது.

எனவே, அரசு முறை செய்தல் என்பது நீதிநெறி வழுவா ஆட்சி முறை மட்டுமன்று. இவ்வாட்சி முறைமைக்காக அரசு செயற்படுத்தும் மக்கள் நல்வாழ்விற்கான நடைமுறையுமாகும்.

குடிமக்களை அகப்பகை, புறப்பகைகளில் இருந்து காத்தல், அவர்களுக்கு நல்லன ஆற்றிப் பேணுதல், ஆட்சியில் தன்னாலும் பிறராலும் குற்றங்கள் நிகழின் அவற்றை நீக்கி முறை செய்தல், குடிமக்களைத் தழுவிச் செயற்படல் முதலியவற்றால் செங்கோலாட்சி நடைபெறச் செய்தலே அரசு முறையாகும்.

அரச முறையில் வஞ்சகத்தோரால் அநீதி இழைக்கப்படின் அது கொடுங்கோலாட்சியாகும். எனவேதான் “களவில்லாகுக” என்கிறார்.

அரசு முறை செய்யவும் வஞ்சகத்தால் பாதிப்புறாமல் இருக்கவும் மக்களின் உரிய பங்களிப்பும் தேவை.

எனவே, சங்கப்புலவர்கள் பொன்னுரையை ஏற்று நாமும் “அரசு முறை செய்க! களவு இல்லாகுக!” என்று வாழ்த்துவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

You might also like