தோழர் அறம் என்று அன்போடு அழைக்கப்பட்ட அறம் வளர்த்த நாதன் அவர்கள் மொழிபெயர்த்த கட்டுரைகளைத் தொகுத்து தோழர் ஆர்.எஸ்.மணி அவர்களது முன் முயற்சியில் இந்தப் புத்தகம் வெளி வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அறம் அவர்களோடு பழகிய நாட்கள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. இந்தப் புத்தகம் வரலாற்றை மீண்டும் எழுதிக் காட்டுவதாக அமைந்துள்ளது.
மதுரை பாத்திமா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி புறவழிச்சாலையில் உள்ள தீக்கதிர் அலுவலகத்திற்கு அறம் நடந்தே வருவார்.
அவருடைய ஜோல்னாப் பையில் கட்டுக்கட்டாக இருப்பவை கரன்சி நோட்டுக்கள் அல்ல; தீக்கதிருக்காக பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ப்ரண்ட்லைன், தி இந்து போன்ற நாளேடுகளிலிருந்து அவர் மொழிபெயர்த்த கட்டுரைகள் அவை.
காலையிலேயே அலுவலகம் வந்துவிடும் அவர், காத்திருந்து அந்தக் கட்டுரைகளை ஆசிரியர் குழுவிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்.
பல சமயங்களில், மதுரை நகருக்குள் ஏதாவது வேலை இருந்தால், நடந்தே செல்வார். ஏதாவது வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னாலும், ஏற்கமாட்டார்.
அவரது பையில் பேனா, பென்சில், ஸ்கேல் போன்ற பொருட்களும் இருக்கும்.
அவர் வரும் வழியில் பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கும் என் பிள்ளைகளிடம் அந்தப் பொருட்களை ஆசையோடு கொடுப்பார்.
“நல்ல படிக்கணும் பேராண்டிகளா!” என்பார். பல ஆண்டுகளாக இது நீடித்தது.
என்னுடைய மூத்த மகன் பாரதி பிளஸ் 2 முடித்து மருத்துவப் படிப்புக்கு சேர்ந்த பிறகும்கூட, இந்தப் பரிசுப் பொருட்களை அவர் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இப்படி பலருக்கும் அவர் படிப்பு சார்ந்த பொருட்களை பரிசளித்துக் கொண்டே இருந்தார்.
தோழர் அறம் இங்க் பேனாவில்தான் எழுதுவார். 60, 70 பக்கங்கள் இருந்தாலும், ஒரு இடத்தில்கூட அடித்தல் திருத்தல் இருக்காது.
கடுமையான ஆங்கிலமும், பொருளடக்கமும் கொண்ட கட்டுரைகளாக இருந்தாலும் அழகிய பழகு தமிழில் அவர் எழுதுவதை படிக்கும் போது தமிழில் எழுதப்பட்ட கட்டுரையை படிப்பது போலவே இருக்கும்.
அவர் தொடர்ச்சியாக மொழிபெயர்த்து தந்த காலத்தில் அவருக்கென்று ஒரு பெரும் வாசகப் பரப்பே இருந்தது.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. தொடர்புடைய கட்டுரை, தொடர்பான துறை அறிவும், ஆழமான ஆங்கிலப் புலமையும் அதை தமிழில் தரும் அளவுக்கு தமிழ்மொழியில் வல்லமையும் அவருக்கு இருந்தது.
வரலாறு, அறிவியல், அரசியல் என பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகளை அவரது கைகள் எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தன.
அவர் யாரிடமும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை; அன்பையும் பரிவையும் பிசைந்து செய்த உள்ளம் அது. எந்தவிதமான பகட்டும் இல்லாமல், மார்க்சியர்களுக்கே உள்ள எளிமை அவரிடம் பூரணமாக குடிகொண்டிருந்தது.
எதிர்மறையாக எதையும் அவர் பேசுவதில்லை. தன்னிடம் உள்ள நேர்மறையான எண்ணங்களையும் அவரைச் சந்திக்கும் அனைவரிடமும் எளிதாக அவர் கடத்திவிடுவார்.
ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் அவர் உழைப்பிலிருந்து ஒருபோதும் ஓய்வு பெற்றதே இல்லை.
‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.
அவருடைய உழைப்பில் விளைந்த கட்டுரைத் தொகுப்பை தொடும் போது, கடந்த காலத்தைத் தொடுவது போன்ற உணர்வு வருகிறது.
எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் தருகிறது.
தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம்,
சிறப்பாசிரியர்,
தீக்கதிர்.