குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!

- ஞானசேகரன் வழக்கில் தமிழக அரசு கோரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள், குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதன்படி, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

அதேநேரம் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்டக் கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like