மே – 3 : உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day).
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.
1993-ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3-ம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991-ம் ஆண்டு இந்நாளிலேயே ‘பத்திரிகை சுதந்திர சாசனம்’ (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.
இது 1991-ம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் 26-ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட, உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்திற்கானதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ / கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.
இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.
இவர் 1986-ம் ஆண்டு டிசம்பர் 17-ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.
இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிகை அறத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டாலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது.
சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெற்று வருகிறது. நடுநிலையான பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம்!