தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் :
மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை.
எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம், கற்க வேண்டும். கற்கும் பொது வாய்ப்புப் பெருக வேண்டும். இது துணை மொழிக் கொள்கை.
தமிழ்நாட்டில் தமிழ் வழி கற்றவர்க்கே வேலையும் வேலை வாய்ப்பும், உயர் கல்வியும், பிற வாய்ப்புகளும் உண்டு. இது வாழ்வுக் கொள்கை.
சோறும் பொருளும் உலக மதிப்புத் தராவிட்டால், தமிழ் தீண்டா மொழியாகிச் செத்துவிடுமல்லவா? ஆதலின் வேலைப் பிழைப்புத் தமிழ் வழிக்கே வழங்கப்படும்.
எந்த இந்தியன் தமிழ் வழிக் கற்றாலும் அவனுக்கும், அவளுக்கும் எல்லாம் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும். தமிழை வேலை மொழியாக்காது பயிற்று மொழியாக மட்டும் வைப்பது பால் சுரவாத மார்பை யொக்கும்.
ஆங்கில வழியில் உயர்கல்வி கற்பார் கற்கட்டும். அதற்கு இவ்வியக்கம் பெருந்தடையில்லை. வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பரந்த அளவில் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று தானே ஆங்கில வழியிற் கற்கின்றார்கள். அவர்கள் வேலைகளைப் பரந்த உலகில் பெறட்டும்.
தமிழ் வழிக் கற்றவர்கட்கு, தமிழ்நாட்டில் வேலைகளை விட்டுக் கொடுக்கட்டும். இதுவே வாழ்வளம்.
உலக மொழியான ஆங்கில வழியிற் மட்டும் பெற்றுவிட்டுத் தமிழ்நாட்டில் வேலை கேட்பதும், தமிழ்நாட்டை நம்பித் தமிழ் கற்றவரின் வேலை வாய்ப்பிற் பங்கு போடுவதும் முறையன்று.
தமிழ் மாநிலத்தில் வேலை வேண்டுமென்றால், தமிழ் வழிப்படி; வேறு வழிகளில் படித்தால் வேறிடங்களில் வேலை தேடு. இதுவே இவ்வியக்கத்தின் நல்லுரை.
நன்றி: ‘தமிழ்மொழிக் கொள்கை ஆவணம்’ நூல்.