‘நூலைப்படி’ பாடலை எழுத எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள்? என பாடலைப் படித்து வியந்த பலர் பாவேந்தரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்:
“நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவோ, நான் எழுத எடுத்துக்கொண்ட நேரமும் அவ்வளவே!”
சங்கத்தமிழ் படிப்போம் தமிழா!
நூலைப் படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
காலையில்படி கடும்ப கல் படி
மாலை இரவு பொருள்ப டும்படி
(நூலைப் படி)
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வ தெப்படி?
(நூலைப் படி)
அறம்படி பொருள் படி
அப்படியே இன்பம் படி
சிறந்ததமிழ் நான்மறை
பிறந்த தென்று சொல்லும்படி
(நூலைப் படி)
அகப்பொருள்படி அதன்படி
புறப்பொருள்படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப்
புலமைவரும் என்சொற்படி
(நூலைப் படி)
சாதிஎன்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி!
சேதிஅப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி
(நூலைப் படி)
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி?
(நூலைப் படி)
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர்சொற்படி
(நூலைப் படி)
– பாவேந்தர் பாரதிதாசன்
குயில் இதழ்: 30.12.1958
இசை: ‘யதுகுலகாம்போதி’
நன்றி: செந்தலை கவுதமன் முகநூல் பதிவு
#பாவேந்தர்பாரதிதாசன் #சங்கத்தமிழ் #sangatamil #pavendharbharathidasan #பாரதிதாசன் #bharathidhasan