காமராஜர் ஆட்சிக் காலத்து கிசுகிசு!

காமராஜர் ஆட்சிக் காலத்து கிசு கிசு…!! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும்.

அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி.

திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள். அதை பரிசீலனையில் வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

இதைத் தெரிந்துகொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார்.

“உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்” என்று வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்.

அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

“எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார்?

ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ?”

அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.

அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

“என்ன உங்கள் சந்தேகம்? கேளுங்கள்!”

அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

காமராஜரே பேசினார்.

“அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே… அது ஏன்? இதுதானே உங்கள் சந்தேகம்?”

தொடர்ந்து காமராஜர் :

“திண்டுக்கல் நகரத்துக்கும், அந்த தொழிற்சாலை அமையப்போகும் இடத்துக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?”

அதிகாரிகள் பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க,

காமராஜர், “அறுபது கிராமங்கள். அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. ஏனெனில் திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையே ஏராளமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

எனவே அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்திருக்கிறேன்.”

அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தான் போட்ட திட்டத்தை விரிவாக விளக்கினார் காமராஜர்.

புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிபந்தனைக்கு சம்மதித்தால், தொழிற்சாலை தொடங்க உடனடியாக அனுமதி கொடுக்கப்படும்.

சம்மதித்தார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர். உடனடியாக அத்தனை மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இப்போது அந்த அறுபது கிராமங்களை ஒட்டியும் மின்கம்பங்கள்.

இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், “இனி நமது வேலை சுலபம். மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக நாம் விநியோகம் செய்து விடலாம்.

இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும்.

அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா?” ஆச்சரியத்துடன் அசந்துபோய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

எவ்வளவு ஒரு சமூக அக்கறை? எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை!

அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி. அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

இப்படிப்பட்ட காமராஜரைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்.

அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரைச் சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

காமராஜர், “ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். உங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் என்னை பாராட்டி எழுதாதீர்கள்.”

இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, தொடர்ந்து காமராஜர் சொன்னார்.

“நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

ஆனால், இந்த கக்கனைப் பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே, அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்.”

காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

ஆன்மீகத்தில் மட்டுமல்ல; அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

காமராஜர் – ஒரு சரித்திரப் பொக்கிஷம்!

நன்றி: முகநூல் பதிவு

You might also like