தென்கச்சி சுவாமிநாதன்: ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்!

நூல் அறிமுகம்: சிறகை விரிப்போம்.

தென்கச்சி கோ. சுவாமிநாதன் – வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டித் தொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை அறிமுகம் ஆனவர். பல்லாண்டு காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர்.

கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம் வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை.

பெரிய பெரிய விஷயங்களைக் கூடத் தெருவோரத்துக் கடையில் மசால் வடை போடும் அலட்சியத்தில் வாரிக் கொட்டுகிற வார்த்தை வளம்.

பல்லாண்டு காலத் தொடர் முயற்சி, தொடர்ச்சி, வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்.

வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி.

“ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்” என்கிறார் இவரைப் பற்றி ‘சொல் வேந்தர்’ சுகி. சிவம்.

பணத்தைச் சம்பாதிப்பது எப்படி? உயர் பதவிகளை அடைவது எப்படி? என்று ஒரு மனிதன், தன் பொருளாதார பலத்தை, சமுதாயத்தில் தன் மதிப்பை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதற்கு வழிகாட்டுகின்றன இவரது சில நூல்கள்.

அமைதியான, ஆனந்தமான, பற்றற்ற வாழ்வை அடைவது எப்படி என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன சில நூல்கள்.

இரண்டு வகை நூல்களுமே வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்கு உதவும் சாதனங்கள்தான். பணமும் பதவிகளும் இருந்தால்தான் அமைதியான ஆனந்தமான வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால், பணமோ பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் இந்த நூல்.

தினமணிக் கதிரில் ஓராண்டு காலத்திற்கு மேல் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

*****

நூல்: சிறகை விரிப்போம்
ஆசிரியர்: தென்கச்சி கோ.சுவாமிநாதன்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 208
விலை: 284/-

You might also like