கலாச்சாரத்தைப் போற்றும் கல்லூரி மாணவிகள்!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை.

மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு.

கேரளாவில் பருவமழை முடிந்ததும் எங்கும் பசுமையாக காணப்படும் நேரத்தில் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையை, கேரளாவில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனா்.

இந்த பண்டிகையின்போது முதல் 10 நாட்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ண பூக்களால் கோலமிட்டு, சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனா்.

கடைசி நாளன்று ஐயப்பன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்த மாணவிகள் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.

மோகினி ஆட்டம், கேரள நடனம், திருவாதிரை களி உள்ளிட்ட நடனங்களும் ஆடல் – பாடல் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. 

இதுகுறித்து பேசிய இக்கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், “எங்கள் கல்லூரியில் பல்வேறு மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் படித்து வருகின்றனர்.

எனவே மாணவிகளிடையே ஒற்றுமையை வலியுறுத்தி பிற இனத்தவரது பண்டிகைகளை அவர்களது கலாச்சார முறைப்படி நாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகை, ஆடிப்பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு, மலையாள வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகளைத் தொடர்ந்து, தற்போது ஓணம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடி இருக்கிறோம்.

இளைய தலைமுறையினரும் பாரம்பரிய கலாச்சார முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதே பாணியில் இந்தக் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறோம்” என்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் 4200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். எம்.ஏ. நாட்டியா துறையும், தொழில் முனைவுப் பிரிவும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

You might also like