அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!

நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.

அந்தப் பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்.

1948-ல் இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது. இந்திய நூலகத்துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்புமுறை.

நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்புமுறை எனப்படுகிறது.

இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. அதோடு, நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய செயல்களுக்காக எஸ்.ஆர். ரங்கநாதன் ‘இந்திய நூலகத் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.

இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12-ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சிறந்த நூலகர்களுக்கு  ‘நல் நூலகர்’ விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது.

நூலகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுவதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.

You might also like