அதிமுக மீண்டும் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?

செய்தி:

வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் வலுவானக் கூட்டணியை அமைப்போம்: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு. 

கோவிந்த் கேள்வி:

சட்டசபைத் தேர்தலுக்கு முன் வலுவான கூட்டணியை அமைப்பதாக சொல்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சி சண்டைகளை முதலில் நிறுத்தி அவற்றை ஈகோ பார்க்காமல் ஒன்றுசேர்க்க பாருங்கள்.

எம்ஜிஆர் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, எஸ்.டி. சோமசுந்தரம் கட்சியைவிட்டு போனபோது அவருடைய வீட்டிற்கே நேரில் சென்று சமாதானப்படுத்தியவர் மக்கள் திலகம்.

அதேமாதிரி தன்னை மிகவும் கடுமையாக விமர்சித்த காளிமுத்துவை அதிமுகவில் சேர்த்து அவருக்கு பதவியும் கொடுத்து மதிப்பையும் கொடுத்தார் ஜெயலலிதா.

அவர்கள் ஈகோ பார்த்திருந்தால் இந்தவிதமான ஒருங்கிணைப்பு நடந்திருக்காது. அதிமுக என்கின்ற இயக்கமும் வலிமைப்பட்டிருக்காது.

அவர்கள் வகித்தப் பதவியில் தற்போது அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவில் அவருக்கு முன்னோடிகளாக இருந்தவர்களின் அரவணைக்கும் பண்பும் சமத்துவமான மனநிலையும் ஒருங்கே அமையப்பெற்று தங்களுடைய இயக்கத்தில் இணைய வருகிறவர்களை வரவேற்றுப் பெருந்தன்மையுடன் நடத்தினால் அதிமுக என்கின்ற இயக்கம் மீண்டும் வலிமை பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும்.

அதிமுகவில் தற்போது இருக்கும் தொண்டர்களும் விரும்புவது அதைத்தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களே.

You might also like