மரம் வளர்ப்போருக்கு வழிகாட்டும் வனத்துறை செயலி!

மரங்களை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், ‘தமிழக மரக்களஞ்சியம்’ (Tamil Nadu Treepedia) எனும் செயலி வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இந்த செயலியில் எளிதாக மரம் வளர்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதில், விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ற மரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

வீட்டுத்தோட்ட மரம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களின் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்கள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விவசாயிகள் இந்த செயலியில் உள்ள ‘இடத்திற்கேற்ற மரத்தேர்வு’, ‘மர இனம் பொறுத்த தேர்வு’, ‘பயன்பாடு பொறுத்தத் தேர்வு’ போன்ற தேர்வு முறைகளைப் பயன்படுத்தி மண்ணிற்கேற்ற மரங்களைத் தேர்வு செய்து பயிரிடலாம்.

தமிழ்நாடு ட்ரீபீடியா என்ற இந்தசெயலி விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. இதில் மரங்களின் பயன் மற்றும் அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்த தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே வர்த்தக ரீதியாக ஒரு குறிப்பிட்ட மர வகைகள் மட்டுமே பரவலாக வளர்க்கப்படுகின்றன. அதோடு அம்மரத்திற்கான தொழிற்சாலைகள் மட்டுமே அதிகமாக உருவாக்கப்படுகின்றன.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அம்மரங்களின் பண்புகளைக்கொண்ட மற்ற மரங்களை அடையாளம் காணவும் மற்றும் அவற்றின் நடவு தொழில்நுட்பத்தைத் தொகுத்து வழங்கவும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மரக்களஞ்சியம் செயலியில் கொடுக்கப்பட்ட தகவலில், ”விவசாயிகள் மற்றும் மர வளர்ப்பு ஆர்வலர்களிடையே சமூக காடுகள், வேளாண் காடுகள், பண்ணைக் காடுகள் மற்றும் நகர மர நடவு போன்ற தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 24.16 விழுக்காடு. தேசிய வன கொள்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 33 விழுக்காடு வனப்பரப்பு அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பரப்பளவில் 25 விழுக்காடு பரப்பில், வருவாய் நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியார் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு வனத்துறை, ‘தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் மர வளர்ப்பு திட்டம்’… ‘ஆற்றுப்படுகை வாய்க்கால் ஓரங்களில் தேக்கு மர நடவு திட்டம்’… ‘அலுவலகம், வீட்டுப்பகுதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல்’… போன்ற மர வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

You might also like