தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி?

தற்கொலை நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 2-வது காரணமாக இருக்கிறது.

நம் நாட்டில் லட்சத்துக்கு, 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 சதவீதம் தற்கொலைகள்.

இதில் 40 சதவீதம் பேர் ஆண்கள், 60 சதவீதம் பேர் பெண்கள். தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் 20-ல் ஒருவர் இறந்து விடுகிறார். தற்கொலை எண்ணம் ஏற்பட முக்கியக் காரணம் மனநோய்களும் நரம்பு கோளாறுகளும்தான்.

அடுத்ததாக மது, போதைப்பொருள் பழக்கம், புகைக்கும் பழக்கம், தகாத பாலுறவு, சூதாடுதல், திருட்டு, சமூகவிரோத குணம், கடன் வாங்குதல் உள்ளிட்டவை தற்கொலையைத் தூண்டுகின்றன.

இதைத்தவிர வேலையின்மை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, வேலை செய்யும் இடங்களில் துன்புறுத்தல், குடும்பங்களில் சித்ரவதை, இளம் வயது திருமணங்கள், பாலியல் தொந்தரவுகள் ஆகியவையும் தற்கொலைக்குக் காரணங்கள்தான்.

அதிக செல்போன், வலைத்தளப் பயன்பாடுகள்கூட தற்கொலைக்கு வித்திடக் கூடியவையாக இருக்கின்றன.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கிடைக்கும் எந்தச் சூழ்நிலையையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.

தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேச தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது கடைபிடிக்கப்படுகிறது.

குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

– நன்றி: தினத்தந்தி

You might also like