கிராமிய வாழ்வின் அற்புதங்களை எழுதும் ஏக்நாத்!

சென்னை புத்தகக் காட்சி 2024: நூல் அறிமுகம்.

பத்திரிகையாளராக பரபரப்பாகப் பணியாற்றிக்கொண்டே ஐந்து நாவல்களை தமிழுக்குத் தந்திருக்கிறார் அன்பு நண்பர் ஏக்நாத்.

சின்னதாகப் பாராட்டினாலும்கூட அந்தளவுக்கு எல்லாம் நான் வளரலைங்க என அதிகம் கூச்சப்படுபவர். அவரது முதல் நாவல் ‘கெடை காடு’ அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியின் இயற்கைச் சித்திரம்.

நெல்லை மாவட்டத்து கிராமிய வாழ்வின் அற்புதங்களையும், அம்மண்ணில் வேரூன்றிய சடங்குகளையும், இயல்பான மனிதர்ளையும், மாறாத வட்டார வழக்கையும் பதிவு செய்வதில் பேரார்வம் கொண்டவர் ஏக்நாத். அந்த வழியில் ‘சாத்தா’ முக்கியத்துவம் பெறுகிறது.

நாவல் பற்றி அவர் சொல்வதைக் கேட்போம்…

கொடை நாள் நள்ளிரவில் பேரமைதி குடி கொண்ட கோயிலைச் சுற்றி மக்கள் கூடியிருக்க, பரணில் மல்லாந்து கிடக்கும் பன்றியின் வயிறு கிழித்து, பொங்கும் ரத்தத்துக்குள் கதலிப் பழங்களைத் திணித்து பிசைந்து உண்ட பண்டாரத் தாத்தாவை, சிறு வயதில் பார்த்தபோதுதான் தெய்வங்களின் மீது முதல் பயம் ஏற்பட்டது.

பிறகு வளர வளர சொல்லப்பட்ட சிறு தெய்வங்களின் வீரம் நிறைந்த கதைகளுக்குள் என்னை நான் விரும்பி சேர்த்துக்கொண்டேன்.

ஒரு நாள் அம்மாவே, சாமிகளின் பிரதிநிதியாகி, கோயிலில் ஆடத் தொடங்கிய பிறகு, சாமிகள் எனக்கும் உறவினர்கள் ஆனார்கள்.

பயம் விலகி, நானே என்னைப் பச்சத்தி மாடனாகவும் தளவாய் மாடசாமியாகவும் பலவேசக்காரனாகவும் சங்கிலிப் பூதத்தாராகவும் மாற்றிப் பார்த்துக்கொள்வேன்.

இச்சாமிகள் குடும்பக் கோயில் வகைக்குள் வந்தாலும் குலதெய்வமும் சா(ஸ்)த்தாவும் வேறென சொல்லப்பட்ட பிறகு அத்தெய்வங்கள் காட்டுக்குள் இருப்பதென அறிந்தேன்.

பெரும்பாலான குல தெய்வங்கள் காட்டுக்குள்ளும், காட்டின் அடிவாரங்களிலுமாகவே குடி கொண்டிருக்கின்றன.

ஏக்நாத்

ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கதையென ‘நாட்டார் கள ஆய்வு’க்குள் சிக்காமல் பல குல தெய்வங்கள், கற்சிலைகளுக்குள் தங்கள் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றன.

அப்படிப்பட்டக் கதைகள் எதையும் இந்த ‘சாத்தா’ நாவல் சொல்லவில்லை.

ஆனால், இது வேறு விஷயங்களை மலங்காட்டு அனுபவத்தோடு பேசும், உங்களுக்குப் பிடித்ததாகவும் பிடிக்காததாகவும்!

சாத்தா (நாவல்)
விற்பனை உரிமை: ஸ்நேகா
விலை: ரூ.220
புத்தகம் வாங்க:
9840138767, 7550098666

You might also like