இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் மனிதாபிமானம்!

கலைவாணரின் உதவும் உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்த மதுரம்.

படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. எல்லோரும் பதைபதைக்க கிருஷ்ணன் மட்டும் சாவகாசமாக இருந்தார்.

முதல்நாள் பயணத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சக நடிகர்களுக்கு தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக் கொண்டார்.

இரண்டாம் நாள் பயணத்திற்கு போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து உதவி கேட்டு நின்றார்.

அப்போது தம்மிடம் இருந்த பணத்தைத் தந்தாலும் அதன் பின்னர் மதுரம் யோசனையில் ஆழ்ந்தார்.

தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை.

அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட கலைவாணரின் குணம் ஆச்சர்யத்தைத் தந்தது அவருக்கு.

படத்தின் தயாரிப்பாளருக்குக் கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதைப் போட்டு குடைந்து கொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக் கதவைத் தட்டினார் கிருஷ்ணன்.

மதுரத்திடம் மெதுவான குரலில் சொன்னார் கிருஷ்ணன், ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க… ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க தவறிட்டாங்க. எப்படியும் கிடைக்கப் போகுது.

அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்க கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையை துவக்கப் போகிறவங்க.

சின்ன கோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக் கூடாது. அவங்க யார்கிட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது.

அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது. இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார்.

நெகிழ்ந்துபோனார் மதுரம்.

‘இப்படி ஒரு குணமுள்ள ஆளா’ என அடுத்த நொடி தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்தார் கிருஷ்ணனிடம்.

என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நகைகளை கழற்றிக் கொடுத்த மதுரத்தின் மீது ஒரு அன்பு பிறந்திருந்தது.

இரண்டொருநாளில் கிருஷ்ணனின் தூதராக மதுரம் இருந்த அறையின் கதவை தட்டினார் ஒரு நடிகர்.

‘கிருஷ்ணன் உங்களை மணக்க விரும்புகிறார்’ என்றார்.

தீவிர சிந்தனைக்குப்பின் தலையாட்டினார் மதுரம். படம் முடிந்த தருவாயில் இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் புனேவிலேயே மதுரம் கழுத்தில் தாலி கட்டினார் கிருஷ்ணன்.

நன்றி: முகநூல் பதிவு.

You might also like