நாகூர் ஹனீபா நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!

“இறைவனிடம் கையேந்துங்கள்”
“அழைக்கின்றார் அண்ணா”
“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே”

– பிரபலமான இந்தப் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள்.

அவற்றில் கம்பீரத்துடன் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபா.
சில திரைப்படங்களிலும் இவரது குரல் தனித்துவத்துடன் ஒலித்திருக்கிறது.

பீம்சிங் இயக்கிய ‘பாவ மன்னிப்பு’ படத்தில் இடம் பெற்ற “எல்லோரும் கொண்டாடுவோம்” பாடலில் டி.எம். எஸ்.ஸூடன் இணைந்து ஒலித்த குரல் இவருடையது.

பல திராவிட இயக்க மாநாடுகளைத் துவக்கிவைத்த குரலுக்குச் சொந்தமான பெருந்தகை நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டுத் தருணம் இது. மகத்தான அவருடைய கம்பீர நினைவாக உருவாக்கப்பட்டதே இந்தக் கட்டுரை.

இஸ்லாமிய இன்னிசை பாடகராக மட்டும் இல்லாமல் திமுகவின் தனி மனித பிரச்சார வானொலியாக திகழ்ந்து மறைந்தவர் நாகூர் ஹனீபா.

எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி என்ற கொள்கைப் பற்றாளராக வாழ்ந்தவர்.

கணீர் கர்ஜனைக் குரலால் கம்பீரத் தமிழ்மொழி உச்சரிப்பால் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கியவர் இசைமுரசு நாகூர் ஹனீபா.

‘உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!’ என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் ‘இசை முரசு’ ஹனீபா.

திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நாகூர் ஹனீபா ஒவ்வோர் ஊர் மேடைகளிலும் பாடியிருக்கிறார். அவரது பாடலை, தந்தை பெரியார் ரசித்துக் கேட்டிருக்கிறார்.

னீபாவின் சிம்மக்குரலைச் சுட்டிக்காட்டி, ‘‘ஹனீபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை’’ எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கும் அந்தக் காலத்திலேயே ஒரு ரூபாய் பரிசும் அளித்து இருக்கிறார் பெரியார்.

பெரியாரிடம் பாராட்டும் பரிசும் வாங்கும் அரிய காட்சியை அன்றைய திராவிட இயக்கத் தோழர்கள் வியந்து இருக்கிறார்கள்.

இஸ்மாயில் முஹம்மது ஹனீபா, 1925, டிசம்பர் 25-ல் பிறந்தவர். பிறந்தது ராமநாதபுரம், குடும்பத்தோடு  வந்து குடியேறியது, கல்வி கற்றது, வளர்ந்தது எல்லாம் நாகூர்.

வளர்த்து விட்ட ஊர் என்பதால் பெயரோடு ஊர்ப்பெயரும் ஒட்டிக்கொண்டது.

திருமண நிகழ்ச்சிகளில் பாடிப் பழகிய அவர், தன்னுடைய 15-ஆவது வயதிலேயே தனியாளாக இசைக் கச்சேரி நடத்தியவர். அந்த நிகழ்ச்சிக்கு 25 ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

சிறுவயதில் இருந்தே சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் ஹனீபா.

1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, நாகூர் வந்த ராஜாஜியை எதிர்த்து நான்கு பேர் கறுப்புக் கொடி காட்டினர். 13 வயதேயான ஹனீபாவும் அவர்களுள் ஒருவர்.

பின்னாள்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பாரதிதாசனின் பாடல்களான, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ முதலானவற்றை தம் கணீர்க் குரலால் பாடினார் ஹனீபா.

‘குடி அரசு’ இதழின் தீவிர வாசிப்பாளரான ஹனீபா, பெரியாரின்மீது பற்றுக்கொண்டு திராவிட இயக்கப் பாடல்களைப் பரப்பத் தொடங்கினார். பெரியார் பற்றிப் பல பாடல்களைப் பாடினார் ஹனீபா.

“பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே!” என்று அவர் பாடிய பாடல்தான் முதன்முதலில் பெரியார் பற்றி இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடன் ஹனீபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயல்பட்டார்.

1953-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களின் வறுமையைப் போக்க தி.மு.க., தமிழ்நாடு முழுவதும் கைத்தறி துணிகளை விற்றது.

அப்போது, அண்ணாவுடன் திருச்சிக்குக் கிளம்பினார் ஹனீபா. திருச்சி மக்களிடம் கைத்தறி துணியை விற்க, ஒலிபெருக்கி இல்லாமலேயே தன் வெண்கலக் குரலால் பாடி, மக்களைக் கவர்ந்தார் ஹனீபா.

அதே ஆண்டு, கோவையில் ஒரு மாநாடு நடந்தது. அண்ணா நடத்திவந்த ‘நம் நாடு’ நாளிதழில்…. அன்றைய நாள், ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடல் வெளியாகியிருந்தது.

அந்த மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளின் பெயரில், அந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடினார் ஹனீபா.

அவர், இசையமைப்பதிலும் வல்லவர் என்பதை அந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

அண்ணா மறைந்தபோது, ‘பட்டுமணல் மெத்தையிலே… பூ மணக்கும் வேளையிலே… உறங்குகிறாய் உறங்குகிறாய் அண்ணா’ என்ற பாடலைப் பாடினார் ஹனீபா.

நாகூர் ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இஸ்லாமிய வழக்கங்களையும், வரலாற்றையும் அழகுத் தமிழில் பட்டிதொட்டியெங்கும் சேர்த்தன ஹனீபாவின் பாடல்கள்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், ஹனீபாவின் பாடல்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். உதாரணமாக, ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’ என்ற பாடலில், பிலால் என்ற நபித்தோழர் அடிமையாக இருந்த வாழ்க்கையைப் பற்றிப் பாடியுள்ளார் ஹனீபா.

தன்னுடய 75 ஆண்டு கால இசைப் பயணத்தில் 15,000 மேடைக் கச்சேரிகளை நிகழ்த்திய மாமேதை ஹனீபா. இவரது இந்தச் சாதனையை எந்தப் புத்தகமும் அங்கீகரிக்கவில்லை என்பது தனிக்கதை.

நாகூர் ஹனீபா என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல் – ‘இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்பதுதான்.

மிக எளிமையான நடையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் சாதி, மதம் கடந்து அனைவராலும் பாடப்படுகிறது.

விட்டல்தாஸ் மகராஜ், மதுரை ஆதீனம் முதலான மதக் குருக்களும் இந்தப் பாடலைப் பொதுவெளியில் பாடி ஹனீபாவின் மத நல்லிணக்கப் பணியை வெளிபடுத்தியிருக்கின்றனர்.

இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் ஹனீபா.

1961-ஆம் ஆண்டு, ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில், டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலைப் பாடினார்.

1992-ஆம் ‘செம்பருத்தி’ திரைப்படத்தில், இளையராஜா இசையில், ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலும், 1997-ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில், ‘உன் மதமா… என் மதமா? ஆண்டவன் என்ன மதம்?’ என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.

தன் குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த நாகூர் ஹனிபா 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி 89-ஆவது வயதில் மரணமடைந்தார்.

தலைவர் கலைஞர் கண்ணீர் மல்க, ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த ஒரு மாநாடும் நாகூர் ஹனிபாவுடைய இசையில்லாமல், தொடங்கியதும் இல்லை; முடிந்ததும் இல்லை.

னீபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன்.

என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன்.

னீபா பாடிய பாடல்கள் என்றென்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க நாகூர் ஹனீபா!’’ என்றார்.

தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்று இசையாகவே மக்கள் மனங்களில் வாழும் நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் நிலையில், அவரது பெயரை, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600028, அடையாறு ஆற்றங்கரையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் கட்டப்படும் இசைப் பல்கலைக் கழகத்தின் புதிய கட்டிடத்திற்கும், அந்த வளாகத்தில் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரிக்கும் சூட்டி பெருமை சேர்க்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

– அ. முகமது காசீம் அனீஸ்

You might also like