டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர்.  இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.  அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

கடைசி வரை களத்தில் இருந்த கே.எல்.ராகுல் 63 பந்துகளில் 58  ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் சீன் அப்பாட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like