ரூ.100 கோடிக்கு காசோலை: வங்கிக் கணக்கில் இருந்ததோ 17 ரூபாய்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வரகலக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு உண்டியல் எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தபோது ராதாகிருஷ்ண என்பவர் பெயரில் ரூ.100 கோடிக்கான காசோலை உண்டியலில் இருந்துள்ளது.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த கோயில் அதிகாரிகள் காசோலையை குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி வைத்து பணத்தை கோயில் வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால், அந்த காசோலையை பார்த்த வங்கி அதிகாரிகள் பரிசீலித்து பார்த்ததில் ராதாகிருஷ்ணா என்பவர் வங்கி கணக்கு என்பதும் அந்த வங்கிக் கணக்கில் ரூ.17 மட்டுமே இருப்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள் அந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தர் வேண்டுமென்றே தங்களை அலைக்கழித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

You might also like