முரளிதரனின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சவாலான பணி!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான  சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

இதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீதேவி மூவீஸின் தயாரிப்பாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் ‘800’ படத்தின் அகில இந்திய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளார்.

‘800’ முதலில் ஒரிஜினல் வெர்ஷன் தமிழில் படமாக்கப்பட்டது. இப்போது அது தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியிடப்படுகிறது.

சிவலெங்க கிருஷ்ண பிரசாத், “முரளிதரனின் வாழ்க்கையை பெரிய திரையில் கொண்டு வருவது சவாலான பணி. அவர் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து இருந்தாலும் வலிமையாக இருந்தார்.

800 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அவர் படைத்துள்ளார். எனவே, படத்திற்கும் அதையே தலைப்பாக வைப்பதே சிறந்ததாக இருக்கும் என முடிவு செய்தோம்.

சிறுவயதில் இருந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஆன வரையிலான அவரது பயணத்தை படம் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு தயாரிப்பாளராக ‘யசோதா’ படத்தை பான் இந்தியா அளவில் வெளியிட்டு வெற்றி கண்டேன். இப்போது ‘800’ திரைப்படத்தை இந்தியா தாண்டியும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

You might also like