‘சந்திரமுகி 2’-க்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான ‘ஆஸ்கார் நாயகன்’ எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.

இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”லைக்கா புரொடக்ஷன்ஸின் ‘சந்திரமுகி 2’ பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர்.

அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன்.

குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால், திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

You might also like