அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது.

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதோடு 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், பால்வாரத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பதிலாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா எந்த துறைக்கான அமைச்சர் என்று விரைவில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்தப் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

You might also like