என்னுடைய படத்தில் இளையராஜா பெயர்!

இயக்குநர் வெங்கட் பிரபு பெருமிதம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் வெங்கட்பிரபு பேசியபோது, “கஸ்டடி என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். நாக சைதன்யாவிடம் முதலில் கதை சொன்னதும் அவருக்கு பிடித்துப் போனது.

என்னுடைய முதல் தேர்வும் அவராகதான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். படம் முழுவதும் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கும்.

வெங்கட்பிரபு படம் என்றாலே ஜாலியாகதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும்.

எனக்கு தெலுங்கு புரியும். சைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால் வேலை செய்தது எளிது.

ராஜா சாரின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. இது ஆக்‌ஷன் படம் என்பதால் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி, “வெங்கட்பிரபு சாருடைய வழக்கமான படம் இது இல்லை என்று மீம்ஸ் பார்த்தேன். படம் வேறுவிதமான எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும்.

அவர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இளையராஜா – யுவன் என அவர்களுடன் படம் செய்ய வேண்டும் என்பது எல்லாருக்கும் கனவு. அது நிறைவேறி இருக்கிறது” என்று நெகிழ்ந்தார்.

நடிகர் நாக சைதன்யா, ” சென்னை சிட்டி என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்கு ‘கஸ்டடி’ பட டிரெய்லர் வெளியிடுவதில் மகிழ்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெங்கட்பிரபு சார் என்னிடம் இந்தப் படத்தின் கதை சொன்னபோது எக்சைட்மெண்ட்டாக இருந்தது.

அதே நம்பிக்கை இப்போது பட வெளியீடு வரை இருக்கிறது.

டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுபோல டிரெய்லரும் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

வெங்கட்பிரபு சாரின் வழக்கமான ஸ்டைல் இதில் மிஸ் ஆகாது. படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

You might also like