ராமசாமி இருக்கிறானா?

பால்ய நண்பன் பற்றிய தந்தை பெரியாரின் நினைவுகள்

பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர்.சாமி, பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது கண்டும் கேட்ட அரிய அனுபவங்களை ‘விடுதலை’ 111வது (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில் எழுதியிருக்கிறார்.

அதில், குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒரு வைணவப் பிராமணச் சிறுவனை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையார் எடுத்து வளர்த்து ஆளாக்கியதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னாளில் அவரை சார் பதிவாளராக பணியை பெறவைத்த வரலாற்றுச் செய்தியை பெரியார் வாயிலாக அறியச் செய்திருக்கிறார் எஸ்.ஆர். சாமி.

பெரியாருக்கு ஒரு அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. பொன்னம்மாள், கண்ணம்மாள் ஆகிய இரு தங்கைகள். கண்ணம்மாளை மாப்பிள்ளை நாயக்கர் என்ற ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

கண்ணம்மாளுக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதால், மாப்பிள்ளை நாயக்கர் இரண்டாம் தாரமாக பொன்னம்மாளை மணந்துகொண்டார்.

இவர்களுக்கு மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் பிறந்தனர். கடைசி மகன்தான் எஸ்.ஆர்.சாமி.

இவரை ஐந்து வயதில் இருந்து வளர்த்துப் படிக்கவைத்தார் பெரியார். சிறுவனாக இருந்தபோது அவரை சுற்றுப்பயணத்துக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

பெரியார் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு ஈரோடு வரும்போதெல்லாம் அவர் கூடவே உதவிக்கு இருப்பார் எஸ்.ஆர்.சாமி. ஈரோடு நேதாஜி சாலையில் உள்ள பெரியார் மன்றத்தில் தங்கிப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பார் பெரியார்.

அப்போது எஸ்.ஆர்.சாமி, பெரியார் மன்ற வாசலில் உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்கள் வந்தால், பெரியாரிடம் அனுமதிப் பெற்று அனுப்பிவைப்பார்.
இனி எஸ்.ஆர்.சாமியின் அனுபவம்…

ஒரு நாள் பட்டைப் பட்டையாக நாமம் தரித்த வயது முதிர்ந்த வைணவப் பிராமணர் ஒருவர், பெரியார் மன்றத்திற்கு வந்தார். வாசலில் உட்கார்ந்த என்னைப் பார்த்து, “ராமசாமி இருக்கிறானா?” என்று ஒருமையில் கேட்டார்.

பெரியாரை ஒரு பிராமணர் ஒருமையில் ‘இருக்கிறானா’ என்று கேட்கிறாரே என்று பொங்கியச் சினத்துடன் சத்தம் போட்டு, இல்லை என்று சொல்லிவிட்டேன். அந்தப் பிராமணர் வாடிய முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

நான் சத்தம் போட்டுப் பேசியதை காதில் வாங்கிய பெரியார் என்னை, “இங்கே வா…” என்று கூப்பிட்டு, “ஏன் சத்தம் போட்டுப் பேசினாய்? யார் வந்து இருக்கிறார்கள்” என்று கேட்டார்.

“ஒரு வயதான பிராமண முதியவர், தங்களை ஒருமையில் ராமசாமி இருக்கிறானா என்று கேட்டார். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டேன்” என்றேன்.

“சரி. அவரைப் போய் அழைத்து வா” என்றார். வெளியே நின்ற அவரை உள்ளே அழைத்து வந்தேன்.

அவர் வந்த உடனே, இருவரும் கண்களில் கண்ணீர் துளிர்க்க கட்டிப்பிடித்து தழுவிக்கொண்டனர்.

அந்தக் காட்சியைப் பார்த்து வியந்து நின்றேன். பின் இருவரும் குடும்ப நலன் குறித்து கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

பின் அந்த முதியவர் என்னைப் பற்றி பெரியாரிடம் குறைகூறினார். அதற்குப் பெரியார், “நம்ம கண்ணு மகன் எஸ்.ஆர்.சாமி” என்று கூறி, என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

பிறகு அவர் விடைபெற்றுச் சென்றதும் எஸ்.ஆர்.சாமியிடம், “வந்த பிராமண முதியவர் சிறுவயதில் தாய் சின்னத்தாயம்மையார் எடுத்து வளர்த்து படிக்கவைத்தார்.

பின் அவருக்கு சார் பதிவாளர் உத்தியோகம் கிடைத்தது. வசதியாக வாழ்ந்து ஓய்வுபெற்றவர்.

நானும் அவரும் சிறுவனாக இருந்தபோது மிக நெருக்கமாகப் பழகிவந்தோம்.
அதனால்தான் சாதாரணமாக பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார்” என்று எஸ்.ஆர்.சாமியை அமைதிப்படுத்தினார்.

“மேலும் இவரைப் போலவே பல அனாதைப் பிள்ளைகளை எடுத்து வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார் சின்னத்தாயம்மையார்” என்றார் பெரியார்.

அன்று பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையார் தொடங்கிவைத்த கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரியார்–மணியம்மையார் காலத்திலும் தொடர்ந்தது. இன்று பெரியார் அறக்கட்டளை அதே பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது.

கட்டுரையாளர்: சு.ஒளிச்செங்கோ.

(அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பெரியார் விருது பெற்றவர்)

You might also like