குழந்தைகளின் மூளையைத் தாக்கும் கொரோனா!

– ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது.

இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன் பயனாக தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்து உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

ஆனாலும் அவ்வப்போது தொற்று உருமாற்றம் அடைந்து பல திரிபுகளாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக அச்சப்பட தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே கொரோனா ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆய்வு குறித்து அமெரிக்காவில் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, டெல்டா வகை தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கர்ப்பமாக இருந்த 2 இளம்பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோது அவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அந்த பெண்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது.

அதில் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டது.

ஆனால் பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உறுதியாகவில்லை. இருந்தபோதும் அவர்களது ரத்தத்தில் அதிகமான ஆண்டிபாடிகள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக மியாமி பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார்.

அதாவது கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு வந்துள்ளது. அதன் பிறகு அது குழந்தைக்கு பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

You might also like