ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக – ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.

அதிலும் குறிப்பாக சனாதனத்துக்கும் வர்ணாசிரமதர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை.

திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக தினந்தோறும் தனது பாய்ச்சலைத் தொடர்ந்தார். திருக்குறளுக்கு தவறான பொருள் சொல்லி, திருக்குறளே தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டார்.

உலகப் பேராசான் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்துவதாக கூறினார்.

பிரிட்டிஷ் ஆட்சி குறித்து விமர்சனங்களைப் பார்த்தபோது இந்திய நாடு இப்போதும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் உள்ளதோ’ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஏதோ ஒரு கற்பனை உலகத்தைக் கட்டமைத்துக் கொண்டு அங்கு காற்றில் கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டில் சமூகச் சலசலப்பையும், தேவையற்ற பதற்றங்களையும், சர்ச்சைகளையும் விதைக்கும் கருத்துக்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.

சட்டமன்றம் – மாநில அமைச்சரவை விருப்ப அதிகார எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியவரே ஆளுநர் ஆவார்.

இப்படித்தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் சொல்கின்றன. இம்முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதும் இல்லை. மாறாக மீறியும் செயல்பட்டு வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர்.

அதிலும் குறிப்பாக 42 உயிர்களைப் பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு இன்னமும் அனுமதி தராமல் இருக்கிறார்.

ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாகச் சந்தித்தது பொதுவெளியில் பரவி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார் ஆளுநர்.

ஏன் இது போன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டபோது அரசுக்கு உரிய எழுத்து மூலம் பதிலைத் தராத ஆளுநர் அவர்கள், மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதே கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவதூறு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் – அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை என்பதே எங்களது இறுதியிலும் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்தும் பாஜக நினைத்து – அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வரும் 12.04.2023 (புதன் கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை இந்த போராட்டம் ஓயாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like