ரயில் பயணிகள் மீது தீ வைப்பு: என்ஐஏ விசாரணை!

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா (2 வயது), ரஹ்மத், சௌபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மர்ம நபர் தீவைத்து எரித்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரெயில் கோழிக்கோடு அருகே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

You might also like