டி-20 யில் 300 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய வீரர்!

சாஹல் சாதனை

ஐதராபாத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியின் 4-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

அதோடு, நடப்புத் தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.

ஜோஸ் பட்லர் 54 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 54 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து 55 ரன்கள் எடுத்தார். பவர் – பிளேயான முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் 85 ரன்கள் திரட்டியது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

யுஸ்வேந்திர சாஹல் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது அது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது.

இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார். அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

ஐ.பி.எல்லில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.

You might also like