முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் குழு ஆய்வு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அதோடு தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இரண்டு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

அணையின் உறுதித் தன்மை குறித்து கேரள அரசு மற்றும் சில அமைப்பினர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் இன்று அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரள அரசு சார்பில் நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜோஸ், நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்க்கீஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மே 9-ம் தேதி அணைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் இன்று ஆய்வு  மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக்குப் பிறகு தமிழ்நாடு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன. அதில் மிக முக்கியமானவை சில. முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து செய்வதற்கும், கட்டுமான பணிகள் செய்வதற்கும் கேரளா அரசு தடையாக உள்ளது.

பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்.

கட்டுமான தளவாடப் பொருட்களை அணைப்பகுதிக்கு வல்லக்கடவு வழியாக தடையின்றி கொண்டு செல்ல உதவ வேண்டும்.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் கட்டுமான பணிகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு சார்பாக வைக்கப்பட உள்ளன.

You might also like