மதுபானம் அத்தியாவசியப் பொருளா?

– உயர்நீதிமன்றம் கேள்வி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்காவில் அமைந்துள்ள வாகைக்குளம் என்ற கிராமத்தில் செயல்பட்டுவந்த மதுக்கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அதில், மதுக்கடையைச் சுற்றிப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், இதனால் மோதல் சம்பவம் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மதுபானக்கடை இருக்கக்கூடிய பகுதி சிறுவர்கள், பெண்கள் அதிகம் சென்றுவரக் கூடிய பகுதியாக உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்றவேண்டும் எனக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில், “மதுபானக்கடை உரிய அனுமதிபெற்று செயல்பட்டு வருவதாகவும், 20 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த மதுபானக்கடைகளும் கிடையாது” எனவும் கூறப்பட்டது.

இதற்கு, “20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது எனக் கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதோடு, இந்த வழக்கு தொடர்பாக உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்குத் துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

You might also like