செங்களம் தொடர் பொறாமைப்படும் படைப்பு!

– இயக்குநர் அமீர் பாராட்டு

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE 5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். 

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ZEE 5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன், “செங்களம் விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை.

கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அதேபோல் செங்களமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். “சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை.

ஆனால், இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைத் தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன்” என்று நெகிழ்ந்தார் டேனியல்.

நடிகை விஜி சந்திரசேகர், “ZEE 5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளன. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார்” என்று பாராட்டினார்.

நடிகை வாணி போஜன், “ZEE 5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக் கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள். இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் செய்யவில்லை என்றேன்.

ஆனால், எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், “அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன் அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். இந்தத் தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்த டிரெய்லர் பார்த்தபோது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ்.ஆர். பிரபாகரன் இப்போதே ஜெயித்துவிட்டார்” என்று மனதாரப் பாராட்டினார்.

“செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது

You might also like