அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்!

-உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைகள் செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலைய சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும் எனவும்

கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும் எனவும்

காவல் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் ‘நைட் விஷன்’ திறனுடன் இருக்க வேண்டும் எனவும் அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

அதோடு காவல் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்ரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், நீதிமன்றங்களும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும் எனவும்

சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது 25 மாநிலங்கள் இன்னும் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சித்தார்த்தா தவே தெரிவித்தார்.

அதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அதோடு இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like