புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!

மக்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் 1,348 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

You might also like